அப்படியே ஜெய்பீம் கொடூரம்- கர்ப்பிணி பெண்ணுக்கு உதை- போலீசார் இழுத்து சென்ற 5 குறவர்கள் எங்கே?
சேலம்: ஜெய்பீம் திரைப்படத்தில் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ராஜாக்கண்ணு மனைவி செங்கேணி கர்ப்பிணியாக போராடும் காட்சி நெஞ்சை உருக்க வைத்தது. தற்போது கள்ளக்குறிச்சி அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறவர் இனத்தைச் சேர்ந்த கணவர் சக்திவேலை மீட்க கர்ப்பிணி பெண் ஒருவர் போராடி வரும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணு உடலை போலீசாரே வேறு இடத்தில் வீசியதுதான் ஜெய்பீம் திரைப்படத்தின் கரு. கணவர் ராஜாக்கண்ணுவுக்காக மனைவி செங்கேணி கையில் ஒரு குழந்தை, வயிற்றில் ஒரு குழந்தையுடன் போலீஸ் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வழக்கறிஞர் சந்துரு மூலம் நீதிக்கு போராடினார் இது ஜெய்பீம் படத்தில்..

மலைக்குறவர்கள் 5 பேர் கைது
இதே காட்சிகள் இன்றும் கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்து கொண்டிருப்பதுதான் பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கொங்கராயபாளையம் கிராமத்தில் மலைக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த குறவர் இனத்தைச் சேர்ந்த 5 ஆண்களை கள்ளக்குறிச்சி கிரைம் போலீசார் என்று சொல்லிக்கொண்ட காவல்துறையினர் வீடுபுகுந்து அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.

மாவட்ட ஆட்சியரிடம் புகார்
இந்த ஆண்கள் 5 பேரும் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு 5 நாட்கள் ஆகின்றன. ஆனால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? என்பதை போலீசார் தெரிவிக்காமல் அவர்களின் குடும்பத்தினரிடம் அவர்களை காட்டாமல் இழுத்தடிப்பு செய்து வருகின்றனர் போலீசார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பூமாலை தலைமையில் அவர்கள் குடும்பத்தினர் நேற்று இரவு மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

கர்ப்பிணி மனைவி கதறல்
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் நம்மிடம் பேசிய சக்திவேலின் கர்ப்பிணி மனைவி உள்ளிட்டோர் கூறியதாவது: நாங்கள் மலைக்குறவர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது கொங்கராயபாளையம் கிராமத்துக்குள் கடந்த 14-ந் தேதி போலீசார் வேக வேகமாக நுழைந்தனர். வீட்டில் இருந்த செல்வம், தர்மராஜ், பிரகாஷ், பரமசிவம், சக்திவேல் ஆகிய 5 பேரை பிரம்பால் அடித்து ரத்தம் சொட்ட சொட்ட போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதில் பரமசிவம், செல்வம் ஆகிய இருவரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் நேற்று இரவு அந்த இருவரையும் விடுவித்து விட்டதாக போலீசார் கூறுகின்றனர்.

5 பேர் கதிதான் என்ன?
ஆனால் போலீசார் விடுவித்ததாக சொல்லப்படும் அந்த 2 பேரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. எஞ்சிய தர்மராஜ், பிரகாஷ், சக்திவேல் ஆகிய 3 பேர் இதுவரை எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா? என்பதை போலீசார்தான் சொல்ல வேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மாவட்ட ஆட்சியர், நீதிமன்றம் என அலைந்து கொண்டிருக்கிறோம் என்றனர். இதனிடையே சற்று முன்னர் கிரைம் போலீசார் கொங்கம்பாளையம் கிராமத்தில் உள்ள மலை குறவர்கள் குடியிருப்பு பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications