காலில் செருப்பு இல்லை! மங்கி குல்லா, ஜெர்கினுடன் சேலத்தில் நள்ளிரவில் நோட்டம்! யார் அந்த நால்வர்?
சேலம்: சேலம், சூரமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் மங்கி குல்லா அணிந்த திருடர்கள் இரவு நேரங்களில் வீடுகளை நோட்டமிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில்தான் கரூரில் உள்ளாடைகளுடன் உடம்பில் எண்ணெய் தேய்த்துக் கொண்ட வந்த 4 பேர் ஒரு வீட்டை நோட்டமிட்ட வீடியோ வைரலானது.

சேலம்- சூரமங்கலம் ரயில்வே சந்திப்பு பகுதியில் மோட்டூர் பகுதியில் மங்கி குல்லா அணிந்து வந்த 4 பேர் வீடு வீடாக நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்ததாக அப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளுடன் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை திருட முயன்ற போது அந்த வீட்டின் உரிமையாளர்கள் எழுந்து வந்ததை அடுத்து அந்த திருடர்கள் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அந்த 4 பேரும் காலில் செருப்பு அணியாதது போல் தெரிகிறது. குளிருக்கு இதமாக ஜெர்கின் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஒருவர் மட்டும் பின்னால் ஒரு பையை மாட்டிக் கொண்டிருக்கிறார். 4 பேரும் அதிகாலை 2 மணிக்கு சாலைகளில் செல்கிறார்கள். அப்போது வீடுகளை நோட்டமிட்டுக் கொண்டே நடக்கிறார்கள். இந்த வீடியோ அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல் ஈரோட்டிலும் அதிகாலை 3.20 மணிக்கு ஒரு வீட்டு சிசிடிவி காட்சியில் 4 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் முகமூடி அணிந்திருப்பதை பார்த்து நாய்கள் குரைத்தன. இவர்கள் கற்களை வீசுகிறார்கள். பின்னர் காரை சுற்றி பார்க்கிறார்கள். இதையடுத்து ஏதோ ஒரு சந்து போல் இருக்கிறது, அதற்குள் செல்கிறார்கள், அது சாலையா, இல்லை தெருவா என தெரியவில்லை. இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் அடிக்கடி சாரல் மழை, பனிப்பொழிவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் வீட்டின் வெளிப்புறம், மொட்டை மாடிகளில் தூங்குவதை பலர் தவிர்த்துவிட்டு வீடுகளில் தூங்குகிறார்கள்.
இந்த நிலையில் உள்ளாடை மட்டுமே அணிந்து கொண்டு முகமூடியுடன் உடலில் எண்ணெய் பூசிக் கொண்டு உருட்டுக் கட்டைகளுடன் கொள்ளையர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருக்கிறார்கள். உள்ளாடையின் பின்புறம் செருப்பை சொருகியுள்ளனர். அந்த வகையில் கடந்த 15 ஆம் தேதி அதிகாலை கரூர் அருகே வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டிற்குள் கொள்ளையர்கள் இருவர் புகுந்து ஒரு கிராம் தங்க மூக்குத்தியை திருடிச் சென்றனர்.
அது போல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை அரவக்குறிச்சி அருகே கொடையூர் கூலி நாயக்கனூர் பகுதியில் மாரப்பன் என்பவரது வீட்டில் 4 முகமூடி கொள்ளையர்கள் உருட்டுக் கட்டைகளுடன் புகுந்துள்ளனர். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மனைவி வனிதா (38) அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர். இது போல் முகமூடி கொள்ளையர்கள், உள்ளாடை கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் போலீஸார் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications