நிரம்பி வழியும் மேட்டூர் அணை.. முழு கொள்ளவை எட்டிய வைகை.. பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் நான்காவது முறையாக நிரம்பி உள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையும் 70 அடியை எட்டியுள்ளது. எனினும் நீர் வரத்து குறைந்ததால், தண்ணீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முக்கிய அணைகள், ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்துவிட்டது. பல அணைகள் நிரைந்துவிட்டன. பல அணைகள் நிறையும் நிலையில் உள்ளன. அந்த வகையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் இந்த ஆண்டில் 4-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பிவிட்டன.
இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி என மொத்தமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 41 ஆயிரத்து 750 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டிருக்கிறது. இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நேற்று முன்தினம் வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11 மணி அளவில் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வெள்ளமாக பாய்தோடுகிறது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையானது தொடர்ந்து 4-வது நாளாக நீடிக்கிறது. இதேபோல் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 3-வது நாளாக நீடிக்கப்பட்டது. இன்று 4வது நாளாக தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 7-வது முறையாக கடந்த 20-ந் தேதி நிரம்பியது. இதனால் நேற்று 5-வது நாளாக அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடியில் இருந்து படிப்படியாக அதிகரித்து நேற்று பகலில் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் அணையில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீராக திறந்து விடப்படுகிறது. இதன்காரணமாக காவிரி பாய்ந்தோடும் சேலம், நாமக்கல் உள்பட 11 மாவட்டங்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
வைகை அணை
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை, முல்லை பெரியாறு மற்றும் வைகையின் துணை ஆறுகளான கொட்டக்குடி, வராக நதி, சுருளி ஆறு உள்ளிட்ட பல ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வைகை அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. ஆகவே கடந்த 18ம் தேதி ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 66 அடியை எட்டியது. அதன்பிறகு மின்னல் வேகத்தில் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. 72 அடி நீர்மட்டம் உள்ள வைகை அணையில் 70 அடிக்குமேல் தண்ணீர் உள்ளது. 71 அடி வரை தான் தண்ணீர் தேக்கவும் முடியும். இதனால் அபாயம் கருதி பெரிய, சிறிய மதகுகளின் வழியே 5 ஆயிரத்து 635 கனஅடி நீர் கடந்த நான்கு நாள் முன்பு வெளியேற்றப்பட்டது. அதேநேரம் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால் கணிசமாக நீர் வரத்து குறைந்ததால் வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. பாசனக் கால்வாயில் மட்டும் தண்ணீர் செல்கிறது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 2286 கன அடியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications