காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி.. சேலம் அருகே ஷாக் சம்பவம்.. வெடித்தது என்ன?
சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலையத்தில் மர்ம பொருள் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி ஜி-1 காவல் நிலைய வளாகத்தில் இருந்த குப்பைகளை எரிக்கும் போது மர்ம பொருள் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இதில், காவல் நிலையத்தின் மேற்கூரை தகரம் உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் நியாமத்துல்லா என்பவர் பலியாகியுள்ளார்.

மேலும் இந்தச் சம்பவத்தில் பரத் என்பவர் காயமடைந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாவட்ட எஸ்.பி அருண் கபிலன் சம்பவம் நடைபெற்ற காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் வெடித்துச் சிதறிய மர்ம பொருள் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்ககிரி சரக காவல் நிலையத்தில் நாளை சங்ககிரி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜா ஆய்வு நடத்த உள்ளதையொட்டி காவல் நிலையம் முழுவதும் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்துள்ளது. இன்று மாலை சுமார் 4 மணியளவில் காவல் நிலையத்தின் வலது பக்கத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்டி தூய்மைப் பணியாளர்கள் எரியவிட்டுக் கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தான் குப்பையில் கிடந்த மர்ம பொருள் வெடித்து சிதறியுள்ளது. இதில் மேற்கூரையில் பட்டு தகரம் தெறித்து விழுந்துள்ளது. தகரம், தூய்மைப் பணியாளர் நியமத்துல்லாவின் தொடையில் பலமாக கிழித்து ரத்தம் கொட்டியுள்ளது. அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் உடனே அவரே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
காவல் நிலையத்தில் வெடித்துச் சிதறிய மர்ம பொருள் எப்படி அங்கு வந்தது, போலீசாரால் கைப்பற்றப்பட்ட பொருளா, அல்லது யாரேனும் திட்டமிட்டு அங்கு கொண்டு வந்து வைத்தார்களா? குப்பையில் கிடந்தது பட்டாசா என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications