டக்.. டக்.. நள்ளிரவில் கேட்கும் சத்தம் - கதவைத் திறந்தால் ஷாக்.. சேலத்தில் பகீர் சம்பவம்
சேலம்: சேலம் மாவட்டத்தில் நள்ளிரவு நேரங்களில் கதவைத் தட்டி வடமாநிலக் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நள்ளிரவு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவனைப் பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கார்த்தி நடித்து வெளியான திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. லாரிகளில் வரும் வடமாநிலக் கொள்ளையர்கள் போர்வை, பெட்சீட் போன்றவற்றை விற்பதுபோல வந்து வீடுகளை முதலில் நோட்டமிடுவார்கள். பின்னர், நள்ளிரவு நேரங்களில் வீடுகளின் கதவைத் தட்டி கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொள்ளையடித்துச் செல்வார்கள்.

படத்தைப் பார்த்த பின்னர் ஒருவிதமான பீதி மனதுக்குள் தொற்றிக் கொள்ளும். அந்த அளவுக்கு, கொடூரமானக் காட்சிகளுடன் திக் திக்கென்ற நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இதேபோல, சேலத்தில் நள்ளிரவு நேரங்களில் கதவைத் தட்டி கொள்ளையடித்துச் செல்லும் வடமாநிலக் கொள்ளையர்களால் குலைநடுங்கிப் போயுள்ளனர் அப்பகுதி மக்கள்.
சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே உள்ள ஆசாத் நகர் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வடமாநிலக் கொள்ளையர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆசாத் நகரில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. இதனால், இரவு நேரங்களில் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருந்து வந்துள்ளனர் அப்பகுதி மக்கள்.
இந்நிலையில், வடமாநிலக் கொள்ளையர்கள் ஆசாத் நகருக்கு நேற்று நள்ளிரவில் வந்துவிட்டு வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். இதனை அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டை சேர்ந்தவர்கள் கண்காணித்துள்ளனர். பக்கத்து வீட்டு மாடியில் ஏறி கொள்ளையர்கள் திருட முயற்தி செய்துள்ளனர். அப்போது, பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அந்தக் கொள்ளையர்களை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இருப்பினும் அந்த கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றுள்ளனர். பொதுமக்கள் அவர்களைப் பிடிக்க முயன்றபோது தப்பியோடியுள்ளனர். இந்நிலையில், அனைவரும் தப்பியோடிய நிலையில் ஒரு கொள்ளையன் மட்டும் பொதுமக்களிடம் வசமாகச் சிக்கியுள்ளான். இதையடுத்து, அவரை மொட்டை மாடியில் வைத்து பொதுமக்கள் அடி வெளுத்துக் கட்டியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கொள்ளையன் சிக்கியது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கொள்ளையனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். போலீஸார் அந்த நபரிடம் விசராணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் லிங்கா, 25 என்பது தெரியவந்துள்ளது. புதிதாக கட்டப்படும் வீடுகளில் இருந்து மோட்டார் பம்புகள், கட்டட வேலைக்கு உபயோகப்படுத்தப்படும் பொருட்களைத் திருடுவதும், ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டின் கதவை உடைத்து திருடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததை அந்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, சந்தன் லிங்கா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பியோடிய கொள்ளையர்களை பிடிப்பதற்கு போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர். அந்தக் குழுவினர் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications