"நீங்க வேற.. எங்க வீட்ல காலை 6 மணிக்கு போன கரெண்ட்.. 8 மணிக்கு தான் வந்துச்சு!" சொல்கிறார் ஈபிஎஸ்
சேலம்: தமிழ்நாட்டில் ஏற்படும் மின் பாதிப்பு குறித்தும் உச்சத்தில் உள்ள பெட்ரோல் டீசல் விலை குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சேலம் புறநகர் மாவட்டம் எடப்பாடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி மின்வெட்டு, பெட்ரோல்- டீசல் விலை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
விடாமல் பிடித்து கொண்டிருந்த மா.செ. பதவி- திடீரென இளங்கோவனுக்கு தாரைவாத்த எடப்பாடி பழனிசாமி!
எடப்பாடி பழனிசாமி
அப்போது சேலத்தில் உட்கட்சி பூசல் இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த பேசிய எடப்பாடி பழனிசாமி, "ஒரே குடும்பத்தில் இருக்கும் 4 பேர் கூட ஒரே கருத்தைக் கொண்டு இருக்க முடியாது. அனைத்து கட்சிகளில் இருப்பது போல அதிமுகவிலும் கூட சில கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதையும் தாண்டி, அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்படுவோம். சேலம் மாவட்டம் என்பது அதிமுகவின் கோட்டை. ஜெயலலிதா காலத்தில் எப்படி சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டையாக இருந்ததோ, அதேபோல இப்போதும் சேலம் அதிமுகவின் கோட்டை தான். கடந்த 2021 தேர்தலில் கூட மொத்தம் 11 தொகுதிகளில் 10இல் அதிமுக வென்று இருந்தது" என்று அவர் தெரிவித்தார்.
என் வீட்டில் கூட
தொடர்ந்து மின் பற்றாக்குறை குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "இப்போது கூட மின்சாரம் எவ்வளவு நேரம் இருக்கும் என்பது தெரியாமல் தான் நாம் நின்று பேசிக் கொண்டு இருக்கிறோம். நான் காலையில் வரும் போது கூட, எங்கள் வீட்டில் காலை 6 மணிக்குப் போன கரெண்ட் 8 மணிக்குத் தான் வந்தது. இப்படி அனைத்து பகுதிகளும் மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு விசைத்தறி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தூங்கக் கூட முடியாது
மின்சாரம் இல்லாமல் விசைத்தறியை இயக்க முடியாது. டீசல் விலையும் உச்சத்தில் உள்ளதால் அதையும் விசைத்தறி உரிமையாளர்களால் பயன்படுத்த முடியாது. மின் பாதிப்பைச் சரி செய்வது அரசின் கடைமை. நிலக்கரி பற்றாக்குறை காரணமாகவே இப்போது மின்வெட்டு ஏற்படுகிறது. தேவையான அளவு நிலக்கரியைக் கொள்முதல் செய்து, மின்சார தேவையைச் சரி செய்யத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரம் என்பது அடிப்படை தேவையாகிவிட்டது. மின்சாரம் இல்லையென்றால் இரவில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியாது.
முன்னேற்பாடுகள் இல்லை
இதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். சட்டசபையில் இந்த விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்துள்ளோம். தமிழக அரசு இந்த விவகாரத்தில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து இருக்க வேண்டும். கடந்த ஆண்டு தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்ததாலேயே எங்கள் ஆட்சியில் மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் கிடைத்தது.
பெட்ரோல் - டீசல் விலை
திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் அதைச் செய்ய மறுக்கிறார்கள். பெட்ரோல் விலையை மட்டும் அதுவும், ரூ 3 மட்டும் குறைத்தார்கள். இதை நாங்கள் சட்டசபையில் பல முறை வலியுறுத்தி பின்னரும் கூட அவர்கள் செயல்படுத்தவில்லை. அதைவிட்டு விட்டு இப்போது மத்திய அரசைக் குறை சொல்கிறார்கள்.
மத்திய அரசு
சொல்லப்போனால் மத்திய அரசு கடந்த ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான வரியைக் குறைக்கவே செய்தது. அதைத் தொடர்ந்து 25 மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைத்தன. ஆனால், தமிழ்நாட்டில் வரி விகிதம் குறைக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு இந்த விவகாரத்தில் வரியைக் குறைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.