அப்பல்லோவில் ராமதாஸை அன்புமணி சந்திக்காதது ஏன்? தந்தையை கவனிக்க தவறிவிட்டார்- அருள் எம்எல்ஏ அட்டாக்
சேலம்: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸை, அன்புமணி சந்திக்காதது ஏன் என சேலத்தில் எம்எல்ஏ அருள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மருத்துவமனையில் தந்தையை கவனிக்க அன்புமணி தவறிவிட்டார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
சேலத்தில் அருள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், அப்பல்லோவில் இருந்த ராமதாஸை அன்புமணி சந்திக்காதது ஏன். தந்தையை மகன் சந்திக்க யாரும் தடுத்தார்களா என்ன?

மருத்துவமனையில் தந்தை ராமதாஸை கவனிக்க அன்புமணி தவறிவிட்டார். ராமதாஸ் ஐசியூவில் அனுமதிக்கப்படவில்லை. பாமக என்ற கட்சியை அன்புமணி தொலைத்து விட்டார். பாமக சட்டசபை குழு தலைவர் ஜி.கே.மணி, பாமக கொறடா நான், இதை யாராலும் மாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டாராம். இதனால் அவரது உடல்நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 5ஆம் தேதி அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு இதயத்தில் உள்ள ரத்தக்குழாயில் எந்த அடைப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
எனினும் மருத்துவமனையில் ஓய்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்,நாம் தமிழர் கட்சியின் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் போய் சந்தித்து அவரது உடல்நிலையை கேட்டறிந்தனர். ரஜினி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
இந்த நிலையில் 7 ஆம் தேதி அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ராமதாஸ் ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் அப்பல்லோவில் ராமதாஸ் இருந்த போது மருத்துவமனைக்கு சென்ற அன்புமணி," ராமதாஸ் நலமாக இருக்கிறார். அவர் ஐசியூவில் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை, 6 மணி நேரம் கழித்துத்தான் பார்க்க முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
ஆஞ்சியோ சோதனையில் அடைப்பெல்லாம் இல்லை" என தெரிவித்திருந்தார். ஆனால் இவர் அவ்வாறு சொன்ன சில நிமிடங்களில் தனி அறையில் ராமதாஸை சுற்றி மனைவி சரஸ்வதி, ஜிகே மணி உள்ளிட்டோர் இருந்த புகைப்படத்தையும் அவர்களுடன் ராமதாஸ் சிரித்து பேசிய புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். எனவே ராமதாஸ் ஐசியூவில் இருப்பதாக அன்புமணி தெரிவித்தது உண்மை இல்லை என தெரியவந்தது.












Click it and Unblock the Notifications