சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியின் பெண் தாளாளர் காலில் விழுந்த பாமக எம்எல்ஏ அருள்! பரபரப்பு
சேலம்: சேலத்தில் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீராமலிங்க வள்ளலார் மேல்நிலைப் பள்ளியை மூட போவதாக வந்த தகவலை அடுத்து பெற்றோர் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அந்த பள்ளித் தாளாளரிடம், பள்ளியை மூட வேண்டாம் என என கோரிக்கை வைத்த சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் திடீரென தாளாளரின் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் பழைய சூரமங்கலத்தில் ஸ்ரீராமலிங்க வள்ளலார் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இது அரசு உதவி பெறும் பள்ளியாகும். இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த பள்ளியை தனியார் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கிவிட்டதாகவும் தொடர்ந்து பள்ளியை இயக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியதை அடுத்து பெற்றோர்கள் சேலம் நூற்பாலையில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த தகவலறிந்து அந்த இடத்திற்கு எம்எல்ஏ அருள் வருகை தந்தார். அவர் பொதுமக்களிடம் விஷயத்தை கேட்டறிந்தார். பின்னர் பள்ளித் தாளாளரிடம் அருள், பெற்றோர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் ஒப்புக் கொள்ளாததை அடுத்து திடீரென காலில் விழுந்து கேட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
இது போல் ஏற்கெனவே ஒரு முறை அவர் பள்ளி மாணவர்களின் காலில் விழுந்துள்ளார். இந்த ஆண்டு ஜனவரி மாதம், சேலம் மாவட்டம் பாகல்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியின் போது திமுகவை சேர்ந்த சிலர் பள்ளிக்கு வந்து அருளிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது பாமகவினரும் குவிந்துவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கிருந்து திமுகவினர் கலைந்து சென்றனர். அப்போது பேசிய அருள், "கண்ணு உங்கள் காலைத் தொட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
நான் அரசியல் செய்ய விரும்ப வில்லை, நல்ல ஒழுக்கத்தைக் கத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் உங்களை அசிங்கப்படுத்திவிட்டார்கள். கட்சிக்காரனாக நான் இங்குப் பேசவில்லை, உங்கள் அசிங்கப்படுத்தின அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து நான் மீண்டும் மன்னிப்புக்கேட்டுக் கொள்கிறேன்" என கூறி மாணவ, மாணவிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அண்மையில் இவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பியது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன், பெரியாண்டிச்சி கோயில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் ஓமலூர் தாசில்தார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படாததால் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் பூட்டப்பட்ட கோயிலை திறப்பதற்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடந்தது.
இதில் ஒரு தரப்பினரின் அழைப்பை ஏற்று சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் வந்திருந்தார். ஒரு தரப்பில் ஆண்களும் மற்றொரு தரப்பில் பெண்களும் மட்டுமே வந்திருந்தனர். அப்போது பெண்கள் தரப்பினரை பார்த்து எம்எல்ஏ அருள், ஏம்மா உங்கள் தரப்பில் ஆம்பளைங்க எவரும் இல்லையா? முக்கியஸ்தர்கள், ஆண்கள் இல்லாமல் எப்படி உறுதியான முடிவை எடுப்பது. உங்கள் தரப்பு ஆண்களை வரச் சொல்லுங்கள் என பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அப்போது அந்த பெண்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதெப்படி எங்களை பார்த்து ஆம்பளைங்களே இல்லையா என கேட்கலாம் என கேட்டு பரபரப்பை கிளப்பினர்.












Click it and Unblock the Notifications