ராமதாஸ் உடனான மோதலுக்கு விரைவில் தீர்வு.. 6 மாதத்திற்குள் சுமூகமாக முடிவு.. அன்புமணி அப்டேட்!
சேலம்: பாமகவின் உட்கட்சி பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதனை முன்கூட்டியே தெரிவிக்க முடியாது என்றும் அன்புமணி கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் முதலே பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் பாமகவின் தலைவராக தம்மை தாமே ராமதாஸ் அறிவித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார். அதேபோல் செயல் தலைவர் பொறுப்பும் ராமதாஸ் தனது மகள் காந்திமதிக்கு கொடுத்துள்ளார். இவர் ஏற்கனவே இளைஞரணி செயலாளராக இருந்து ராஜினாமா செய்த முகுந்தனின் தாய் ஆவார்.

இதனால் மகனின் இடத்திற்கு ராமதாஸ் மகளை கொண்டு வந்திருப்பதாக பார்க்கப்படுகிறது. பாமக இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் தரப்பு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மறுபுறம் அன்புமண், சட்டசபைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி நடத்தி வருகிறார்.
அண்மையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பைஜயந்த் பாண்டாவுடன் சந்திப்பு நடத்தி ஆலோசனை நடத்தி இருந்தார். இதனால் பாமக மீண்டும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி பேசுகையில், டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம்.
நாங்கள் போராடியதன் விளைவாகவே நீதிமன்ற உத்தரவின் பெயரில் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள மது ஆலைகளில் 7 ஆலைகளை திமுகவைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கின்றனர். மது கடைகளை அடைத்த பின் சந்து கடைகள் மூலமாக விற்பனை நடந்து வருகிறது. அதேபோல் மணல் குவாரிகளில் ஊழல் நடந்திருக்கிறது என்றார்.
தொடர்ந்து பாமக இரு பிரிவுகளாக இருப்பது தொடர்பான கேள்விக்கு, ஒரு சில கட்சிகளில் உட்கட்சி பிரச்சனை இருந்து வருகிறது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கின்றன. எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரி.. எங்கள் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும் சரி.. சுமூகமாக தீர்க்கப்படும். தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதனை முன்கூட்டியே கூற முடியாது.
விரைவில் பாமக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என்பதை அறிவிப்போம். திமுக ஆட்சியில் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றாமல் பெயர் மட்டும் வைத்து திமுக விளம்பர ஆட்சி நடத்தி வருகிறது. சிறந்த திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. அதனால் இந்த தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications