மகள் போட்டோவை வேறொரு மாணவருடன் ஆபாசமாக சித்தரித்த தாய்.. இளைஞரின் தந்தை கொடுத்த தரமான பதிலடி
மாணவர் ஒருவரின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக சித்தரித்து சேலம் அரசு டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்: மாணவர் ஒருவரின் புகைப்படத்தை மாணவியுடன் ஆபாசமாக சித்தரித்து அரசு டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்டிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை இப்போது பார்ப்போம்.
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி சங்ககிரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதில் பிளஸ் 2 படிக்கும் மகன், நீட் தேர்வுக்கு பயிற்சிக்காக தனியார் பயிற்சி நிறுவனத்திற்கு சென்று வந்தார்.
இப்படி தினசரி நீட் தேர்வு பயிற்சிக்கு போகும் போது, அதே பகுதியில் ஸ்டிக்கர் கடை உரிமையாளராக உள்ள உதயகுமார் என்பவருடன் மாணவனுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் உதயகுமாரின் பழக்கம் எப்படி என்றால் மாணவனின் பெற்றோரை மிரட்டி பணம் பறிப்பதிலேயே நோக்கமாக இருந்ததாம்.

கல்லூரி மாணவி
இதற்காக தனது கடையில் வேலை பார்த்த துலசம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக், ஞானசேகரன் ஆகிய இரண்டு பேரை கூட்டு சேர்த்திருக்கிறார் உதயக்குமார். அவர்கள் சமூக வலைதளத்தில் இருந்த மாணவனின் போட்டோவை எடுத்து, தங்களுக்கு தெரிந்த கல்லூரி மாணவியின் போட்டோவை இணைத்து ஆபாசமாக மார்ப்பிங் செய்துள்ளனர்.

மாணவியின் தாய்
பின்னர் அந்த கல்லூரி மாணவியின் தாய், ஸ்டிக்கர் கடை உரிமையாளர் உதயக்குமார் ஆகியோர் நேராக மாணவனின் தந்தையான டாக்டரிடம் சென்று படத்தை காட்டியுள்ளனர். பார்த்த உடனேயே இது உண்மையான படம் இல்லை என்று அவர்களை விரட்டி இருக்கிறார் டாக்டர் ரமேஷ்.

விஷம் குடித்ததாக நாடகம்
ஆனால் தன் மகளுடன் உங்கள் மகன் இருக்கும் போட்டோவை வெளியிடாமல் இருக்க 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் அவர்கள். ஆனால் டாக்டர் ரமேஷ் அதை கொண்டுள்ளாமல் இருந்துள்ளார். இதனிடையே உதயகுமாரிடம் வேலை பார்க்கும் கார்த்திக், ஞானசேகர் ஆகியோர், அந்த மாணவியின் தாய் மனஉளைச்சலில் விஷத்தை குடித்துவிட்டார் என்றும், 10 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்றும் மீண்டும் டாக்டர் ரமேஷை மிரட்டி உள்ளனர்.

சிக்கிய இரண்டு பேர்
அப்போது கார்த்திக், ஞானசேகர் ஆகிய இருவரையும் வீட்டில் உட்கார வைத்துவிட்டு நேராக போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் டாக்டர் ரமேஷ். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கார்த்திக், ஞானசேகரனை பிடித்து விசாரித்து இருக்கிறார்கள். அப்போது பணம் பறிக்கும் நோக்கில் இதுபோல் அவர்கள் செயல்பட்டது தெரியவந்தது. இதன்பேரில் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மாணவியின் தாய் மற்றும் உதயகுமார் ஆகியோரை தேடி வருகின்றனர். டாக்டர் மகனை மிரட்டி பணம் பறிக்க முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications