சேலம் விஜயபானு 10 ரூபாய்க்கு சோறு போட்டு 3 கிலோ தங்கத்தை அள்ளி.. சேலத்தில் போலீசார் திடீர் அறிவிப்பு
சேலம்: சேலம் அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பெயரில் பொதுமக்களை ஏமாற்றிய நான்கு பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதன் விசாரணை தீவிரமாகி வருகிறது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்டோர் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளதாகவும், பணத்தை இழந்தவர்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறும் காவல்துறை தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆந்திரா, வேலூர் தவிர, சேலத்தில் மட்டுமே 2000க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.500 கோடி மோசடி செய்திருக்கிறாராம் அறக்கட்டளை நிர்வாகி விஜயபானு. ஆனால், 119 பேர் மட்டுமே இதுவரை புகார் அவர் மீது அளித்துள்ளனர். மற்றவர்கள் இதுவரை புகார் தராமலேயே உள்ளனர்.

விஜயபானு: இந்நிலையில், "பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீட்டு தர வேண்டும், இல்லாவிட்டால் கைது செய்யப்பட்ட விஜயபானுவை விடுதலை செய்ய வேண்டும், அவரை விடுதலை செய்தால் பணத்தை நாங்களே பெற்றுகொள்கிறோம், காவல்துறையினர் நடத்திய சோதனையால் தான் எங்களது பணம் கிடைக்காமல் உள்ளது" என்று கூறி நேற்றைய தினம் சேலத்தில் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.
இதையடுத்து, அவர்களிடம் சமாதானம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், பாதிக்கப்பட்ட மக்கள் முறையான புகார் அளிக்குமாறு வலியுறுத்தினார்கள். இதனிடையே, பொருளாதார குற்றப்பிரிவு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள்.
செய்திக்குறிப்பு: அந்த செய்திக்குறிப்பில், "கடந்த இரண்டு வருடங்களாக சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட அம்மாபேட்டையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை என்ற பெயரில், விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையது முகமது ஆகியோர்கள், பொது மக்களை வரவழைத்து இலவசமாக கணினி பயிற்சி, தையல் பயிற்சி, ஆங்கில மொழி பயிற்சி, TNPSC Group-I முதல் IV வரையிலான தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், அரசுபள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக டியூசன் கற்றுத் தரப்படும் என்று கூறியுள்ளனர்.
மேலும் கூடைப் பின்னல், பாக்குதட்டு தயாரித்தல், மெழுகுவர்த்தி, சாம்பிராணி தயாரித்தல், மற்றும் கைவினைத் தொழில்கள் கற்றுத் தரப்படும் என்றும், பயிற்சியின் போது பத்து ரூபாயில் மதிய உணவு வழங்கப்படும் என்று விளம்பரம் செய்துள்ளனர். பொதுமக்களை கூட்டி, சுமார் ஒரு மாதம் பயிற்சி அளித்து பயிற்சியின் போது பத்து ரூபாயில் இலவச சாப்பாடு மற்றும் இடையிலே தேனீர், தின்பண்டங்கள் கொடுத்துள்ளனர்.
மகிழ்ச்சி: இதனால் மகிழ்சியடைந்த பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகமாக கூட ஆரம்பித்துள்ளனர். மேலும் தாங்கள் தொடங்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் கூடுதலாக அதிக பணம் கிடைக்கும் என்றும், வாழ்க்கைதரம் உயரும், அப்பொழுது தங்களை போல் நிறுவனம் ஆரம்பித்து, எழை எளிய மக்களுக்கு உதவலாம் என்று சட்டத்தால் வரைமுறைப்படுத்தாத பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். salem annai therasa ngo
அதன்படி, Grocery Scheme என்ற பெயரில் ரூ.1,000-ஐ முதலீடு செய்தால், சுமார் ஒன்றரை மாதத்திற்குள் ரூ.2,000க்கான வீட்டுமளிகை சாமான்களும், Pension Scheme என்ற பெயரில் ரூ.1,00,000 செலுத்தினால் 7 மாதத்திற்கு மாதம் ரூ. 30,000 வீதம் மொத்தம் ரூ. 2,10,000-ம், தருவதாகவும், Housing Plot Scheme மூலம் மாதம் ரூ.10,000 வீதம் 12 மாதத்திற்கு ரூ.1,20,000-த்தை முதலீடாக செலுத்தினால் 750 சதுர அடிகள், காலிமனை கொடுப்பதாகவும், Gold Jewel Scheme கீழ் மாதம் ரூ.1,500 வீதம் 12 மாதத்திற்கு, 18,000 கட்டினால் 5 கிராம் தங்க நகை வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
முதலீடு: அதை நம்பிய பொதுமக்கள் அவர்களின் வசதிக்கேற்ப பணத்தை கடந்த இரண்டு வருடமாக முதலீடு செய்துவந்துள்ளனர். இறுதியாக கடந்த 23.01.2025ம் தேதி பொதுமக்களிடம் ரூ.1 லட்சத்தை டெபாசிட் செய்தால் மாதம் ரூ.30,000 வீதம் ஒன்பது மாதங்களுக்கு வழங்கப்படும் என்றும், இந்த சிறப்பு திட்டம் இன்றே கடைசி என்றும், விளம்பரம் செய்து பொதுமக்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர்.
இதுகுறித்து 23.01.2025 அன்று கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு குற்ற எண்: 01/2025 U/s 316, 318 r/w 62 BNS 2023 & Sec 3, 5, 21(1), 23 of the Banning of Unregulated Deposit Schemes Act, 2019 ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு, பொருளாதார குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் தலைமையில் புனித அன்னை தெரசா மனித நேய அறக்கட்டளை இயங்கி வந்த சிவகாமி திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
சிறப்பு திட்டம்: சிறப்பு திட்டம் மற்றும் பிறதிட்டத்தின் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளது கண்டுபிக்கப்பட்டது. பின்னர் விஜயபானு, ஜெயபிரதா, பாஸ்கர் மற்றும் சையத் மஹமூத் ஆகியோர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து பணம் ரூ.12,68,42,850 மற்றும் சுமார் 3 கிலோ கிராம் எடையுள்ள தங்கநகையும், சுமார் 13 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
குற்றவாளிகளையும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய பொருட்களையும், கோவை TNPID கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனங்கள் மூன்றையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புகார் கொடுங்கள்: மேலும் விசாரணையில் விஜயபானு மீது ஏற்கனவே சென்னை, பூந்தமல்லி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் 216 நபர்கள், முதலீடாக 4,31,95,500 கோடியை இழந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தில் பணத்தை இழந்த பொதுமக்கள் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்குமாறு தெரியப்படுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications