அதிரடி.. பாஜகவின் ஐடி விங்க் மாவட்ட செயலாளர் கைது.. பரபரத்துப்போன சேலம்
சேலம்: சேலம் அருகே நடந்த அடிதடி மற்றும் அரிவாள் வெட்டு சம்பவத்தில் பாஜகவின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சாமுவேலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வீரகனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கலியன். இவரது மகன் ரவிக்குமார். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.

இந்த பெயிண்டிங் தொழிலை ரவிக்குமார், சதீஷ் என்பவருடன் சேர்ந்து மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் ரவிக்குமார், சதீஷ் ஆகியோர் இடையே திடீரென்று மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் 2 பேரும் பேசவில்லை. அதோடு கருத்து வேறுபாட்டால் ரவிக்குமார் தனியாக பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். இது சதீசுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. அதோடு சதீஷ், ரவிக்குமாருக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளார். இதுபற்றி சதீஷ் தனது உறவினரும், பாஜகவின் சேலம் மாவட்ட ஐடி விங்க் செயலாளருமான சாமுவேலிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சாமுவேல், ரவிக்குமாரை பேச்சுவார்த்தை அழைத்துள்ளார். அப்போது அவர்கள் பெயிண்டிங் தொழில் பற்றி பேசியுள்ளனர். இந்த வேளையில் திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு கைக்கலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ரவிக்குமார், அவரது அண்ணன்கள் புகழநே்தி, யுவன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் காயமடைந்த மூவரும் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து வீரகனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் வழக்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications