தங்க நகையை பார்த்ததும் தடுமாறிய புத்தி.. சேலம் அருகே அசிங்கப்பட்ட விஏஓ.. தெரிய வந்த ட்விஸ்ட்
சேலம்: சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீரங்கம்மாள் என்பவர் தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். இவரிடம் தென்னங்கீற்று விலை கேட்பது போல் நடித்து ஸ்ரீரங்கம்மாளிடம் பேச்சு கொடுத்து தங்க நகையை அபேஸ் செய்துவிட்டு ஒருவர் தலைமறைவானார். அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் என்பது தெரியவந்தது. அந்த விஏஓவை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே கருமாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீரங்கம்மாளுக்கு 62 வயது ஆகிறது. இவர், அந்த பகுதியில்தென்னங்கீற்று தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். கடந்த மே மாதம் 26-ந் தேதி ஸ்ரீரங்கம்மாளின் வீட்டுக்கு ஒரு நபர் வந்துள்ளார். வந்த நபர், தென்னங்கீற்று விலை கேட்பது போல் நடித்து ஸ்ரீரங்கம்மாளிடம் பேச்சு கொடுத்து ஒன்றே கால் பவுன் தங்க நகையை அபேஸ் செய்து விட்டு எஸ்கேப் ஆனார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையே பெண்ணை ஏமாற்றி நகையை அபேஸ் செய்தது கள்ளக்குறிச்சி மாவட்டம் தோட்டப்பாடி பகுதியை சேர்ந்த பிரபு (47) என்பது தெரிய வந்தது. இவர், கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஒழுங்கீன செயலால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் தென்னங்கீற்று வாங்குவது போல் பேச்சு கொடுத்ததுடன், வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருவதாகவும், இதனால் கடன் வாங்கி திருப்பாத நகைகள் ஏலம் விடப்படுவதாகவும், அதனை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறி ஸ்ரீரங்கம்மாளை பிரபு ஏமாற்றி நகையை அபேஸ் செய்து சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரபு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின.
பிரபுவின் தந்தை கிராம உதவியாளராக பணிபுரிந்த போது இறந்தார். இதனால் பிரபுக்கு வாரிசு வேலையாக கிராம நிர்வாக அதிகாரி பணி கிடைத்திருக்கிறது. ஆனால் பிரபு பணியில் சேர்ந்த காலம் முதலே, சரிவர பணிக்கு வராமலும், மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் 2015-ம் ஆண்டு அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சேலம், கள்ளக்குறிச்சி, கும்பகோணம், திட்டக்குடி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் அரசு வேலைகளில் இருப்பதாக கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் மோசடியில் ஈடுபட்டதும், இதுதொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. ஒழுங்கீன செயலால் பிரபு கிராம நிர்வாக அதிகாரி பணியில் இருந்து தொடர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்ததை கண்ட போலீசார், அவரை வாழப்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications