தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்பே.. மன்னித்தும் சிக்கிய சேலம் தொழில் அதிபர்
சேலம்: சொத்து தகராறில் தன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மகனை தந்தை மன்னித்த போதும், கொடூர வீடியோவால் சிக்கியிருக்கிறார் மகன். மகனை கடைசி வரை காட்டிக்கொடுக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கிறார் தந்தை. இந்த உண்மையும் தற்போது தான் வெளியே வந்திருக்கிறார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் குழந்தை வேலு. இவரது மனைவி ஹேமா . இவர்களுக்கு சக்திவேல் என்கிற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் சக்திவேல் பி.டெக் எம்.பி.ஏ படித்து முடித்துவிட்டு, தனது தந்தையின் தொழில்களை கவனித்து வருகிறார்.

குழந்தை வேலுவுக்கு சேலம் மாவட்டம் ஆத்தூரில் அமிர்தா சேகோ மில் ஒன்றும், பெரம்பலூர் மாவட்டத்தில் மாடர்ன் ரைஸ்மில் ஒன்றும் இருக்கிறது. இதில் குழந்தை வேலுவின் மகன் சக்திவேல், ஆத்தூரில் உள்ள சேகோ தொழிற்சாலை கவனித்து வருகிறார்.
கடந்த சில வருடங்களாக தந்தையின் தொழிலை நடத்தி வரும் சக்திவேல் கடன் பிரச்சனையில் சிக்கி உள்ளார். வெளியில் அதிக கடன் வாங்கியதால் கட்ட முடியாமல் தவித்துள்ளார். இதனால் தந்தையின் பெரம்பலூர் ரைஸ் மில்லின் பணத்தை பயன்படுத்த விரும்பி உள்ளார்..
ஆனால் அந்த பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தை வேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலு தான் முழுமையாக அதனை பார்த்து வந்துள்ளார். தனது கடன் பிரச்சனைக்கு உதவ வில்லை என்று கூறி சக்தவேல், தனது தந்தை குழந்தைவேலு மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 16.02.2024 அன்று பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலுவிடம் இந்த விவகாரம் தொடர்பாக சக்திவேல் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர் சக்திவேல் குழந்தைவேலுவை தனது இரண்டு கைகளால் மாறி மாறி முகத்தில் குத்தி கொலை வெறியுடன் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை ரத்தம் சொட்ட சொட்ட முகத்தில் தாக்கி உள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த குழந்தைவேலு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் குறிப்பிட்ட தனியார் மருத்துவமனையில் இருந்து பெரம்பலூர் மாவட்டம் கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இந்த வழக்கை கைகளத்தூர் போலீஸ் ஸ்டேசன் எஸ்ஐ பழனிசாமி விசாரணை நடத்தி வந்துள்ளார்.
இதனிடையே சிகிச்சையில் இருந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையை தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து சமரசமாக சென்றுவிட்டாராம். தன் மகன் தன்னை தாக்கியதாக அப்போது அவர் காட்டிக்கொடுக்கவில்லை.. ஆனால் சிகிச்சை முடிந்து வந்த இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
குழந்தைவேலுவை 16.02.2024 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால், கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைது செய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவாகரத்தில் மகனை காட்டிக்கொடுக்காமல் தந்தை உயிரையே விட்டுள்ளார், கடைசி வரை எதையும் சொல்லாத நிலையில், உண்மை தற்போது தானாக வெளியே வந்துள்ளது.












Click it and Unblock the Notifications