கண்டிப்பாக முடக்குவோம்.. சேலம் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறுத்தும் தவெக.. சேலம் புது எம்எல்ஏ அறிவிப்பு
சேலம்: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK), தனது முதல் சட்டமன்றப் பிரதிநிதித்துவத்தின் மூலமே பெரும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சேலம் மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எஸ். லட்சுமணன், தனது முதல் ஊடக சந்திப்பிலேயே வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியையும், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜவுளி பூங்கா திட்டத்திற்கு முட்டுக்கட்டை
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டம் 'சேலம் ஜவுளி பூங்கா' (Salem Textile Park). இதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், எம்.எல்.ஏ லட்சுமணன் இதனை உடனடியாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார். "எனது முதல் மற்றும் முதன்மையான நோக்கம், சேலம் ஜவுளி பூங்காவில் தற்போது நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும் உடனடியாக நிறுத்துவதுதான்" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் முதல் முன்னுரிமை தொகுதி வளர்ச்சி சார்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒரு உற்பத்தி சார்ந்த (Manufacturing sector) திட்டத்தை முடக்குவதே தனது லட்சியம் என்று அவர் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
தொடர் தோல்விகளில் சேலம் உள்கட்டமைப்பு
சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவிலான உள்கட்டமைப்பு மற்றும் தொழில் திட்டங்கள் பல்வேறு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டு வருகின்றன.
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை: விவசாயிகளின் எதிர்ப்பு மற்றும் அரசியல் அழுத்தங்களால் இந்த பிரம்மாண்டமான விரைவுச் சாலைத் திட்டம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டது. இது சேலத்தின் போக்குவரத்து இணைப்பை உலகத் தரத்திற்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது திமுக அரசால் கைவிடப்பட்டது. அதன்பின் இதை எக்ஸ்பிரஸ் வே போல அல்லாமல் தனிமைப்படுத்தப்பட் சாலைகளாக கொண்டு வரும் திட்டங்கள் நடந்து வருகின்றன.
சேலம் விமான நிலைய விரிவாக்கம்: நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் உள்ளூர் அரசியல் நிலைப்பாடுகளால் விமான நிலைய விரிவாக்கப் பணிகளும் மந்தகதியிலேயே உள்ளன. இதனால் சேலத்திற்கான விமான போக்குவரத்து சேவை இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை.
தற்போது ஜவுளி பூங்கா: மேற்கண்ட இரு பெரும் திட்டங்களும் முடங்கிய நிலையில், சேலத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கவும் உதவும் ஒரே நம்பிக்கையாக இந்த ஜவுளி பூங்கா பார்க்கப்பட்டது. இப்போது அதற்கும் புதிய எம்.எல்.ஏ மூலம் ஆபத்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது.
வளர்ச்சியா? அரசியலா? - வாக்காளர்களின் குமுறல்
சேலம் மாநகரப் பகுதி வாக்காளர்கள், குறிப்பாக கல்வி கற்ற நடுத்தர வர்க்கத்தினர், இத்தகைய சட்டமன்ற முன்னுரிமைகளைக் கண்டு அதிருப்தியில் உள்ளனர். "மாற்றத்தை விரும்பி வாக்களித்த சேலம் நகர வாக்காளர்களுக்கு இதுதான் பரிசா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு புறம் அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூரும், ஈரோடும் தொழில் துறையில் அசுர வளர்ச்சி கண்டு வரும் நிலையில், சேலம் மட்டும் ஏன் பின்னோக்கிச் செல்கிறது என்ற ஆதங்கம் மக்களிடையே எழுந்துள்ளது.
தொழில் முதலீடுகள் இல்லாத ஒரு நகரில் வேலைவாய்ப்பு என்பது எட்டாக்கனியாகிவிடும். ஜவுளி பூங்கா போன்ற ஒரு பெரிய உற்பத்தித் திட்டம் நிறுத்தப்பட்டால், அது அந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த ஜிடிபி (GDP) வளர்ச்சியைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பிற முதலீட்டாளர்களையும் சேலம் பக்கம் வர அச்சப்பட வைக்கும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களின் நலனுக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் போராடுவது இயல்பு. ஆனால், வளர்ச்சித் திட்டங்களை முடக்குவதையே பிரதான நோக்கமாகக் கொள்வது நீண்ட கால அடிப்படையில் மாவட்டத்திற்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த நிலைப்பாடு அந்த கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவுமா அல்லது சேலத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சேலத்தின் வளர்ச்சி கனவுகள் மீண்டும் ஒருமுறை அரசியல் சூறாவளியில் சிக்கித் தவிக்கின்றன.












Click it and Unblock the Notifications