போதைப்பொருள் சப்ளையே குஜராத் வழியாகத்தான்.. பாஜக ஆளும் மாநிலங்கள் ‘டாப்’.. மோடிக்கு ஸ்டாலின் பதிலடி!
சேலம்: போதைப்பொருள் அதிகம் பிடிபடும் 10 மாநிலங்களில் 7 மாநிலங்கள் பாஜக ஆள்பவை. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் குஜராத் வழியாகத்தான் போதைப்பொருள் சப்ளை ஆகிறது என பிரதமர் மோடிக்கு பதில் அளித்துப் பேசியுள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதற்கட்டமான ஏப்ரல் 19ஆம் தேதியே வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நமோ ஆப் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று உரையாடினார்.

போதைப்பொருள் பற்றி மோடி பேசியது: அப்போது பேசிய பிரதமர் மோடி, "தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினை, ஊழல் நிலவுவது கவலையாக உள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தமிழகத்தில் ஆட்சி மோசமான நிலையில் உள்ளது. போதைப்பொருட்கள் நடமாட்டம் இவர்களால் மட்டுமே நடக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராக பாஜக போராட வேண்டும். போதைப்பொருள் கும்பலின் தலைமையகமாக தமிழ்நாடு உள்ளது" கூறி இருந்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி அவர்களையும், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களுக்கு வாக்கு சேகரித்து உரையாற்றினார் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின். அப்போது பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் போதைப் பொருகள் புழக்கம் அதிகமாக உள்ளதாக பேசியதற்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்.
ஸ்டாலின் பதிலடி: முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "போதைப் பொருட்கள் பற்றி பேசியிருக்கிறார் பிரதமர் மோடி. திமுகவில் இருந்த ஒருவர் மேல் இது தொடர்பாகக் குற்றச்சாட்டு எழுந்ததுமே, அந்த நபர் அடுத்த விநாடியே கட்சியை விட்டு நீக்கிவிட்டோம். அவர் மீதான விசாரணைக்கு நாங்கள் தடையாக இல்லை. இந்த வழக்கை வைத்து, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பது போன்று அவதூறு பரப்புரை செய்கிறார். இது, அவர் இப்போது வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல!
இந்தியாவிற்கே போதைப் பொருள் குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் வருகிறது என்று பிடிக்கிறார்கள். ஒரு காலத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்ததே நீங்கள்தானே? இப்போதும் உங்கள் கட்சிதானே அங்கு ஆட்சியில் இருக்கிறது? இது பற்றியாவது வாய் திறப்பீர்களா?
டாப் 10ல் பாஜக ஆளும் மாநிலங்கள்: பா.ஜ.க ஆளும் மாநிலங்களில்தான் நாட்டிலேயே போதைப் பொருள் அதிகம் விற்பனையாகிறது என்று ஒரு புள்ளிவிவரம் வந்திருக்கிறது. அது எதுவும் நாங்கள் சொன்னது இல்லை. மாநிலங்களவையில் கடந்த டிசம்பர் மாதம் உங்கள் ஆட்சி சார்பில் மத்திய அரசு வைத்த அறிக்கையில் இருக்கிறது.
அதுமட்டுமல்ல, போதைப் பொருள் அதிகமாக கைப்பற்றப்பட்ட 'டாப் 10' மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பா.ஜ. ஆட்சிதான் நடக்கிறது! இந்தப் பத்து மாநிலங்களில் 'தமிழ்நாடு' என்ற பெயரே இல்லை! அந்தளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை நமது திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டு இளைஞர்களை பற்றி அவதூறாக பேசுகிறார் மோடி: பிரதமர் மோடி அவர்களே... உங்கள் ஆட்சி அறிக்கையிலேயே இல்லாத தமிழ்நாட்டைப் பற்றி அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பொய்க் குற்றச்சாட்டை வைக்கிறீர்களே... உங்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் மேல் அப்படி என்ன கோபம்? இது மாதிரியான அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, தமிழ்நாட்டு மக்களையும், எங்கள் இளைஞர்களையும் ஏன் அவதூறு செய்கிறீர்கள்...
மாண்புமிகு பிரதமர் அவர்களே... உங்களுக்குச் சொல்லப்படாத ஒரு தகவலைச் சொல்கிறேன்... போதைப் பொருள் தொடர்புடைய வழக்குகளில் பா.ஜ.கவைச் சேர்ந்த 14 பேர் இங்கு சிறைகளில் இருக்கிறார்கள். அதற்கும் ஆதாரம் இருக்கிறது. இதற்குப் பிரதமர் மோடி என்ன விளக்கம் அளிப்பார்?
பிரதமர் என்பது ஒரு உயர்ந்த பதவி! இதுவரைக்கும் எத்தனையோ பிரதமர்களின் தேர்தல் பிரச்சாரங்களைப் பார்த்திருக்கிறோம்... அவர்கள் ஆட்சியில் நாட்டிற்குச் செய்ததைச் சொல்வார்கள்... அடுத்து ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யப்போகிறோம் என்று சொல்வார்கள்... ஆனால் பிரதமர் மோடி சாதனைகள் சொல்ல வழியில்லை என்று வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்." என கடுமையாக விமர்சித்துள்ளார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications