ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி போட்டி... சேலத்தில் ஆச்சர்யம்.. சேவையாற்ற பேரார்வம்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் முருங்கப்பட்டி கிராம ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு 92 வயதான மூதாட்டி கனகவல்லி என்பவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.
மூதாட்டி கனகவல்லி ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் முருங்கப்பட்டி கிராம ஊராட்சி தலைவராக பதவி வகித்துள்ளார்.
சேவை குடும்பம்
இதே கிராம ஊராட்சியில் கணவர் அழகேசபூபதி, மகன் பார்த்தசாரதி ஆகியோர் தலா 20 ஆண்டுகள் ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கான அடிப்படை வசதிகள்
ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கனகவல்லி கூறுகையில், தானும், தனது குடும்பத்தினரும், ஊராட்சிமன்ற தலைவராக இருந்தபோது, தங்களுடைய கிராமத்திற்கு தேவையான சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றி தந்தோம்.
மக்களுக்கு நம்பிக்கை
இதனால் எங்கள் மீது பொதுமக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளதாகவும், தேர்தலுக்காக பொதுமக்கள் எங்களை ஒரு ரூபாய் கூட செய்ய விடுவதில்லை என பெருமையாக தெரிவித்தார் அவர்.
மக்களே பணம் கட்டினர்
பொதுமக்களே தங்களுடைய பணத்தை செலவு செய்து எங்களை தேர்தலில் போட்டியிட வைக்கின்றனர் என்றார். மேலும் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்று, பொதுமக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உள்ளதாக கனகவல்லி நம்பிக்கை தெரிவித்தார்.
பாராட்ட வேண்டும்
காசு கொடுத்தால்தான் ஓட்டு என்ற தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்களே ஒருவருக்கு செலவு செய்து தேர்தலில் போட்டியிட வைப்பது, பொதுமக்கள் அந்த மூதாட்டியின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் வைத்துள்ள அதீத நம்பிக்கையையே காட்டுகிறது. தள்ளாத வயதிலும் மக்கள் பணியாற்ற உள்ளாட்சி தேர்தலில் களம் காணும் கனகவல்லியின் முயற்சி பாராட்டுக்குரியதே.