கொரோனா தடுப்பூசி... 2ஆவது டோஸை எடுத்துக்கொண்டார்... முதல்வர் எடப்பாடி பழனிசாமி
சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்றிரவு எடுத்துக்கொண்டார்.
கொரோனா பரவல் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் முதலில் ஜனவரி 16ஆம் தேதி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்போது பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். அதேபோல முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசார பணிகளுக்கு மத்தியில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.
முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு எடுத்துக்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 5,441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,20,827 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று கொரோனாவால் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 12,863 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications