சேலத்தில் விஜய் மக்கள் சந்திப்புக்கு போலீசார் அனுமதி! 5000 பேர் மட்டுமே பங்கேற்கவேண்டும் என கண்டிஷன்
சேலம்: சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் 13 ஆம் தேதி விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. பிரச்சாரக் கூட்டத்தில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது நிகழ்ந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

செங்கோட்டையனின் வருகை கட்சிக்கு மிகப்பெரிய பலத்தை சேர்த்திருப்பதாக கூறிய விஜய், கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை வலுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஆளுங்கட்சியான திமுகவை தீயசக்தி என்று குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்தாக சேலத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. ஈரோட்டுக்கு முன்பே சேலத்தில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள், மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் கார்த்திகை தீபத் திருவிழா, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் காரணமாக போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என கூறி விஜய் பரப்புரைக் கூட்டத்திற்கு சேலம் மாநகர போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்தே ஈரோட்டில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் டிசம்பரில் நடத்தப்பட்டது. இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் மற்றொரு மாவட்டமான சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த தவெக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். சேலம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துவதற்கான பணிகளை தவெக நிர்வாகிகள் மேற்கொண்டு வந்தனர்.
தவெக பிரச்சாரக் கூட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இந்நிலையில் சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்திற்கு பல்வேறு நிபந்தனையுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. சேலம் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் தவெக மாவட்ட செயலாளர் பார்த்திபன் மனுவை ஏற்று நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியில் வரும் 13 ஆம் தேதி விஜய் பங்கேற்கும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதியில்லை. பகல் 12 மணி முதல் 3 மணிவ ரை கூட்டம் நடத்திக் கொள்ளலாம். பிரச்சாரக் கூட்டத்தில் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications