வீரபாண்டி ஆ. ராஜா பதவி பறிப்பு- சேலத்தில் ஆதரவாளர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
சேலம்: சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ. ராஜா நீக்கப்பட்டதற்கு எதிராக அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். சேலத்தில் ஆ.ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து கொங்கு மண்டல திமுகவில் களைஎடுக்கும் பணிகளை அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார்.
இதன் முதல் கட்டமாக சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் பதவியில் இருந்து வீரபாண்டி ஆ.ராஜா நீக்கப்பட்டார். அவருக்கு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
ஆனால் இதனை வீரபாண்டி ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள் ஏற்கவில்லை. இதனால் திமுக தலைமையை கண்டித்து சேலம் மாவட்டத்தில் பல இடங்களில் இன்று ஆ. ராஜாவின் ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.
சேலத்தில் ராஜாவின் ஆதரவாளர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த திமுக நிர்வாகிகள் அத்தொண்டர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.