ஓபிஎஸ் எதிர்காலம் எப்படி இருக்கும்? வந்து விழுந்த கேள்வி.. குபீரென சிரித்து ஈபிஎஸ் கூறிய பதில்!என்ன?
சேலம்: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வரும் நிலையில் இன்று அவரிடம், ‛‛ஒபிஎஸ் எதிர்காலம் எப்படி இருக்கும்'' என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு குபீரென சிரித்தபடியே எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்த வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.
அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆண்டு கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது.
இதையடுத்து கடந்த 2022 ம் ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு கூடியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு கட்சி விதிகளில் திருத்தமும் செய்யப்பட்டது.

பொதுச்செயலாளரான ஈபிஎஸ்
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. அதாவது ஜூலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும் என நீதிமன்றங்கள் கூறின. இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் எடப்பாடி பழனிச்சாமி மட்டும் மனுத்தாக்கல் செய்த நிலையில் அவர் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார்.

மேல்முறையீடு வழக்கு
இந்நிலையில் தான் அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த உயர்நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ஈபிஎஸ்ஸிடம் வந்து விழுந்த கேள்வி
முன்னதாக இன்று காலையில் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பத்திரிகையாளரை சந்தித்தார். அப்போது ஓபிஎஸ் எதிர்காலம் என்னவாக இருக்கும்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி, ‛‛இதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்களை பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. என்னிடம் கேட்க வேண்டிய கேள்விகளை மட்டும் கேளுங்கள். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை அவரிடம் கேளுங்கள். அவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்'' என சிரித்தபடியே பதிலளித்தார்.

சோதனைகளை கடந்து வெற்றி
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வருகிறாரே, அவரது இந்த செயல் உங்களின் செயல்பாட்டை பாதிக்கிறதா? என கேட்கப்பட்டது. இதற்கு ஓ பன்னீர் செல்வம், ‛‛எங்களுக்கு பக்குவப்பட்டு விட்டது. ஏனென்றால் எம்ஜிஆர் கட்சியை உருவாக்கியபோது பல சோதனைகளை சந்தித்தார். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதா பல சோதனைகளை சந்தித்தார். இருபெரும் தலைவர்களும் சோதனைகளை கடந்து தான் வெற்றி கண்டனர். ஒவ்வொரு காலத்திலும் அதிமுக சோதனைகளை சந்தித்துள்ளது. அதோடு இறுதியில் வெற்றி கண்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications