நேற்று தை மாத முதல் சுபமுகூர்த்த நாள்! திமுக இளைஞரணி மாநாடுக்கு டிமிக்கி கொடுத்த நிர்வாகிகள்!
சேலம்: நேற்று தை மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாள் என்பதால் திமுக நிர்வாகிகள் பலரும் சேலத்தில் நடைபெற்ற இளைஞரணி மாநாடுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் இல்ல மண விழாக்களே ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் நேற்றும், இன்றும் நடைபெறுவதால், அவர்களால் மாநாடுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததால் நிர்வாகிகள் பலரும் தை மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாட்களான ஜனவரி 21 மற்றும் 22ஆம் தேதிகளில் சுபகாரியங்கள் நடத்த தேதி குறித்துவிட்டனர்.

இதனிடையே சென்னை மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 24ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை வெள்ளம் காரணமாக மீண்டும் திமுக இளைஞரணி மாநாடு ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போதே திமுக நிர்வாகிகள் பலருக்கும் ஜெர்க் ஆனது. மாநாடு நடத்த வேறு தேதியே கிடைக்கவில்லையா, கரெக்டாக சுப முகூர்த்த நாளிலா நடத்துவது என பலரும் புலம்ப ஆரம்பித்தனர்.
இருப்பினும் தலைமையின் அறிவிப்பை ஏற்று மாநாடுக்கான பணிகளை கவனித்தனர். இதனிடையே ஒவ்வொரு ஊரிலும் திமுக இளைஞரணி மாநாடுக்கு ஏற்கனவே வருவதாக சொன்னவர்களில் குறைந்தது 10 பேர் வரை , சொந்தக்காரர்கள் வீட்டு கல்யாணம், இல்ல நிகழ்ச்சி என பல காரணங்களை கூறி சேலம் செல்வதை தவிர்த்திருக்கின்றனர். இதில் அவர்களை யாரும் குறை சொல்லவோ, குற்றஞ்சொல்லவோ முடியாது. ஒரு வேளை மாநாடு திட்டமிட்டப்படி டிசம்பர் 17ஆம் தேதியோ அல்லது 24ஆம் தேதி நடைபெற்றிருந்தால் நேற்று திரண்ட கூட்டத்தை விட இன்னும் 20,000 பேர் முதல் 40,000 பேர் கூடுதலாக திரண்டிருப்பார்கள்.
அதேபோல் மாநாடுக்கு சென்றவர்களில் பலரும் தங்கள் மாவட்ட நிர்வாகிகளை பார்த்து வணக்கம் வைத்த கையோடு அட்டெண்டன்ஸை போட்டுவிட்டு ஊருக்கு திரும்பியவர்களும் ஏராளம்.












Click it and Unblock the Notifications