சேலம் ஏற்காடு மலையில் ஈக்கள் மொய்த்த சூட்கேஸ்.. திறந்ததும் திடுக்கிட்ட போலீஸ்.. யார் அந்த பெண்?
சேலம்: சேலம் ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து உடலை வீசி சென்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பாதையில் வியாழக்கிழமை காலையில் 20 அடி பள்ளம் ஒன்றில் துர்நாற்றம் வீசியது. இதுபற்றி தகவல் அறிந்து வந்து பார்த்த வனத்துறையினர், சூட்கேஸ் ஒன்று ஈக்கள், எறும்புகள் மொய்த்தபடி கிடந்ததை கண்டனர். அதில் யாருடைய உடலோ இருப்பதை உணர்ந்த வனத்துறையினர் உடனடியாக ஏற்காடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து ஏற்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்கள். சூட்கேசை திறந்து பார்த்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சூட்கேசுக்குள் கை, கால்கள் மடக்கி வைக்கப்பட்டு இளம்பெண் ஒருவரது உடல் கிடந்தது. உடலோ முகமோ, அடையாளம் காண முடியாதபடி அழுகிய நிலையில் கிடந்தது.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் , கைரேகைகளை சேகரித்தார்கள் தொடர்ந்து சூட்கேசுடன் அந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த பெண்ணின் உடலை பார்த்த போலீசார், அவருக்கு 20 முதல் 25 வயது வரை இருக்கலாம் என்பதை யூகித்துள்ளனர். கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் ஆகி இருக்கும் என்பதையும் போலீசார் யூகித்துள்ளனர். கொலையான பெண் யார் என்பதை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கொலையானவர் யார் என்ற விவரம் தெரிந்தால் மட்டுமே அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது தெரியவரும் என்பதால் போலீசார் ஏற்காடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.
வேறு எங்கேயோ கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து வைத்து இங்கு கொண்டு வந்து வீசியிருக்கலாம் என சந்தேகிக்கும் ஏற்காடு போலீசார், ஒரு வாரமாக ஏற்காட்டுக்கு வந்து சென்றவர்கள், வாகனங்கள், இருசக்கர வாகனங்களின் போலீசார் சேகரித்து வருகின்றனர்.
அதேபோல் சேலம் உள்பட தமிழ்நாடு முழுவதும் சமீபத்தில் காணாமல் போன இளம்பெண்களின் விவரங்களையும் போலீசார் விசாரிக்கிறார்கள். ஏற்காடு அடிவாரம் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கையில் முக்கியமான சில தகவல்கள் தெரிய வரும் என்பதால், அதனை வைத்து அடையாளம் காணும் முயற்சியில் இறங்க உள்ளனர். ஏற்காட்டில் இளம் பெண் உடல் சூட்கேஸில் இருந்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications