8000 கிமீ நீளத்துக்கு இது ஏன்? வானத்தில் இருந்து கடலில் பார்த்தால் அதிர்ச்சி.. அரண்டு போன அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவின் கடற்கரைகளில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை ஒன்று அந்நாட்டு அரசு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக கடல் பகுதிகளில் கடற்பாசி காணப்படுவது வழக்கம்தான். இது குறைந்த அளவில் காணப்பட்டால் பிரச்சனை இல்லை. கடலுக்குள் உள்ளே சில மீன்களுக்கு இந்த பாசிகள் இருப்பிடமாக இருந்தாலும் பெரும்பாலான கடல் உயிரினங்களுக்கு இது எதிரிதான்.
ஆனால் கடல் பாசி மிக அதிக அளவில் இருக்கும் பட்சத்தில் கடல் மாசு அடைய இது காரணம் ஆகும். அதேபோல் மீன் வகைகள் இறக்கவும், கடலின் கரையில் பாசிகள் சேர்ந்து குப்பையாகவும் காரணம் ஆகும்.

மீன்கள்
கடல் மாசு அடைவதை ஒரு வகையில் இந்த பாசிகள் உணர்த்த கூடியவை. இந்த நிலையில்தான் அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கடற்பாசிகள் இருக்கின்றன. அமெரிக்காவே இவ்வளவு பெரியது கிடையாதே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் விஞ்ஞானிகள் சொல்வது கடற்பாசியின் மொத்த நீளம். அதாவது அமெரிக்காவின் ப்ளோரிடா, மெக்சிகோ கடற்கரைகளில் இருக்கும் கடற்பாசியை 8 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு நீளமாக போட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு தூரம்
ஸ்பேசில் இருந்து பார்த்தாலே தெரியும் அளவிற்கு இந்த கடற்பாசிகள் நீளமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். இதன் மொத்த எடை 20 மில்லியன் டன் இருக்கும். உலகிலேயே இதுதான் மிகப்பெரிய கடற்பாசி கூடாரம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது சாதாரண நாட்களில் பிரச்சனை கிடையாது. ஆனால் மொத்தமாக கடற்பாசிகள் வெளியேறும் போது அவை அழுகிப்போய் நாசமாகும். இது கடலை மாசுபடுத்தும். அதோடு மீன்களை கொல்லும். மண் வளத்தையும் மோசமாக்கும்

கடல் நீர்
கடல் நீரின் தரம் மோசமாகும். மீன் குட்டிகள் மரணம் அடையும், என்று தெரிவித்து உள்ளனர். ஸ்பேசில் இருந்து பார்க்கும் அளவிற்கு இது மிக நீளமாக இருப்பதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன. மிகப்பெரிய இயற்கை பேரழிவிற்கு சமமாக பார்க்கப்படுகிறது. சாட்டிலைட் புகைப்படங்கள் பலவற்றில் இதை உறுதி செய்துள்ளனர். கடற்கரை முழுக்க நீண்ட கோடு போல பிரவுன் நிறத்தில் இந்த கடற்பாசிகள் காணப்படுகின்றன. பொதுவாக மே மாதங்களில்தான் இப்படி நடக்கும்.

முன்கூட்டியே நடந்துள்ளது
ஆனால் இந்த வருடம் முன் கூட்டியே இப்படி நடந்து உள்ளது. அது மட்டுமின்றி இந்த வருடம் மிக அதிக அளவில் கடற்பாசிகள் கரை ஒதுங்கி உள்ளன. காலநிலை மாற்றத்தால் இப்படி ஏற்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் கூட ஐநா வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி. உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.... கடந்த சில மாதங்களுக்கு முன் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications