சிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி
சிங்கப்பூர்: வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் சிங்கப்பூரில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் தமிழ் மொழி விழா 2019ன் ஒரு அங்கமாக, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!" என்ற இலக்கியச் சொற்பொழிவு நிகழ்ச்சியை, 19-04-2019 அன்று, உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் மிகச்சிறப்பாக நடத்தியது.
வாணியம்பாடி இஸ்லாமியாக் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர், தொலைக்காட்சி மற்றும் "அகடவிகடம்" புகழ், கவிமாமணி பேராசிரியர் முனைவர் தி. மு. அப்துல் காதர் அவர்கள் "தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ் மொழியின் அருமைகளையும் பெருமைகளையும் அவர் பரிமாறிய செந்தமிழ்ப் பந்தியில் எடுத்து வைத்தார்.

பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், திரு ஜைனல் பின் சபாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
"ஒத்திகை" என்ற தலைப்பில் உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய மாணவர்களாகிய கிருத்திக்கேஷ், அருண், தமிழ் இலக்கியா, ஆன் சாஃப்ரின், பிரவின் ராஜ், யுவராஜ், ஹரி நாராயணன், ஹரீஸ்வரன், சுசிந்தர் ஆகியோர் முனைவர் ரா. விமலன் ஒருங்கிணைத்து, தமிழாசிரியர் திரு. வீ. ராமர் எழுதி இயக்கிய குறு நாடகம் ஒன்றை அரங்கேற்றினர்.

சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் திரு. நசீர் கனி அவர்களுக்கு, அவர் சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆற்றிவரும் சமூகச் சேவையைப் பாராட்டி உயரிய "ஜமாலியன் விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது.
GCE "A" நிலைத் தேர்வுகளில் உயர்தமிழ் உள்ளிட்ட பாடங்களில் சிறப்புத் தேர்ச்சிப் பெற்ற விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவர் முஹம்மது மாதிஹ் அவர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் சீனப் பெண்கள் பள்ளி மாணவி அனுமிதா முரளியின் தமிழ் வாழ்த்துப் படலோடுத் துவங்கிய இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் தலைமை தாங்கினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் திரு. சு. ராஜகுமார் இந்நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும், பொதுமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி "தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்" என்ற முழக்கத்தோடு இனிதே நிறைவு பெற்றது.












Click it and Unblock the Notifications