"மருத்துவமனையில் இப்படி செய்யலாமா லோகேஷ்.." நொந்து கொண்ட நீதிபதி.. சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை
சிங்கப்பூர்: சீட்டிங் உள்ளிட்ட பல புகார்களில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், சிங்கப்பூர் நாட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காகச் செல்கிறார்கள். குறிப்பாக ஐடி உள்ளிட்ட துறைகளில் நாம் சிறந்து விளங்குவதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்களுக்குத் தேவை அதிகமாகவே உள்ளது.

இந்தியருக்குச் சிறை: அப்படி இந்தியர்கள் செல்லும் நாடுகளில் ஒன்றாகச் சிங்கப்பூர் இருக்கிறது. அங்கே சமீபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். முதுகுவலிக்கு மருத்துவச் சிகிச்சை பெற அங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் பாலிகிளினிக்குகளில் ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றியது உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இப்போது சிறைத் தண்டனை பெற்றுள்ள அந்த நபர் 42 வயதான லோகேஸ்வரன் மோகன்தாஸ். அவர் தனது சகோதரர் போலவும் மற்றொரு நபர் போலவும் தன்னை காட்டிக் கொண்டு முதுகு வலிக்குச் சிகிச்சை பெற்றுள்ளார். மருத்துவ கட்டணத்தில் இருந்து தப்பவே அவர் இப்படிச் செய்துள்ளார். இந்த விவகாரத்தில் தான் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
என்ன நடந்தது: லோகேஸ்வரன் கடந்த 2011இல் நண்பர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அதன் பிறகு அவ்வப்போது அந்த நண்பரைத் தொடர்பு கொண்டு கடன் வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதற்கிடையே கடந்த 2015இல் லோகேஸ்வரன் மீண்டும் அந்த நபரை தொடர்பு கொண்டு ஹோட்டலில் வேலை வாங்கி தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக ஐடி கார்ட் நகலைக் கேட்டுள்ளார். அந்த நபரும் அவர் கேட்டபடியே ஐடி கார்ட் நகலை அனுப்பியுள்ளார்.
இருப்பினும், அதன் பிறகு லோகேஷ்வரன் அவரை தொடர்பு கொள்ளவே இல்லை. அதேநேரம் லோகேஸ்வரன் கடந்த 2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் எட்டு முறை மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போதெல்லாம் லோகேஷ் இந்த நபரின் ஐடி கார்டு தகவல்களைக் கொடுத்துவிடுவாராம். இதனால் இந்த நபருக்கு பில்கள் சென்றுவிடும்.
சகோதரரையும் விடவில்லை: இதேபோல தனது சகோதரர் ஐடி கார்டையும் வாங்கி அவரை போலவே நடித்தும் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில், அவர் தனது சகோதரரைப் போலக் காட்டிக் கொண்டு சிகிச்சை பெற்றுள்ளார். தாங்கள் எங்கும் சிகிச்சை பெறாத நிலையில், திடீரென இப்படி தங்கள் பெயரில் மருத்துவ பில் வருவதால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின்னரே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து சிங்கப்பூர் போலீசார் இந்த நபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் லோகேஷ் தான் செய்த தவறையும் ஒப்புக் கொண்டார். இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "லோகேஸ்வரன் மருத்துவமனைகளை ஏமாற்றியுள்ளார். மருத்துவமனைகள் நல்லெண்ண அடிப்படையில் இவரது ஐடி கார்டுகளை ஏற்றுச் சிகிச்சை அளித்துள்ளன.
சிறைத் தண்டனை: எனவே, அதைத் தவறு எனச் சொல்ல முடியாது.. மருத்துவச் சிகிச்சை நடைமுறைகளைக் கடுமையாக்கினால், அது உண்மையான நோயாளிகளுக்கு நிறையச் சிரமங்களை உருவாக்கும்" என்று கூறி, லோகேஷ்வரனுக்கு மட்டும் 6 வாரங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications