தமிழர் வாழாத நாடு பூமிப்பந்தில் இல்லை! அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான வேர்களைத் தேடி திட்டம்!
சிங்கப்பூர்: அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான வேர்களைத் தேடி என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூரில் தொடங்கி வைத்திருக்கிறார்.
ஆண்டுதோறும் 200 அயலக தமிழ் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து தமிழர்களின் சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த திட்டத்தை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு;

தமிழர் வாழாத நாடு இந்த பூமிப்பந்தில் இல்லை என்று சொல்லத் தக்க அளவுக்கு பரந்து விரிந்து வாழும் தமிழர் அனைவர்க்கும் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பது திராவிட இயக்கம்தான்.
சிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு என்பது, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. தமிழ்மொழியில் ஏற்பட்ட எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலில் ஏற்றுக்கொண்டு செயற்படுத்திய நாடு சிங்கப்பூர்.
சிங்கப்பூரில் தமிழ் நாளிதழ் தான் முதலில் தோன்றியது. சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் இடம்பெற்றுள்ளது. தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் பலர் சிங்கப்பூரில் பல்வகைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் பணியிலும் திராவிட மாடல் அரசு பெரும்பங்காற்றி வருகிறது.
சிங்கப்பூர் குடிமக்களாகிய தமிழ் மக்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் முதலிய பல்வேறு பொறுப்புகளில் இருந்து வருவதும் எனக்குப் பெரு மகிழ்ச்சி தருகிறது.
தமிழும் - தமிழ்நாடும் - திராவிட இயக்கக் கொள்கைகளும் இணைக்கும் நம்மை மதமோ, சாதியோ பிளவுபடுத்திவிட முடியாது.












Click it and Unblock the Notifications