172 முறை அடகு வைப்பு: சிங்கப்பூர் மாரியம்மன் கோவில் மாஜி தலைமை அர்ச்சகருக்கு 6 ஆண்டு ஜெயில்!
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் நகைகளை 172 முறை அடகு வைத்து பணம் சம்பாதித்த முன்னாள் தலைமை அர்ச்சகரான தமிழ்நாட்டை சேர்ந்த கந்தசாமி சேனாபதிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் சாலை மாரியம்மன் கோவிலில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றியவர் கந்தசாமி சேனாபதி. அவருக்கு வயது 36. மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகராகப் பணியாற்றிய போது கோவில் நகைகளை சட்டவிரோதமாக அடகு வைத்து பணம் பெற்றிருக்கிறார் கந்தசாமி.

கோவில் நகைகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெறும் காலங்களில் கோவில் நகைகளை மீட்டு கணக்கில் சேர்த்துள்ளார். கந்தசாமி சேனாபதியின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் கோவில் நிர்வாகத்துக்கு தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் கோவில் நகைகளை 172 முறை தாம் அடகு வைத்ததாக கந்தசாமி சேனாபதி ஒப்புக் கொண்டார்.
மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான அனைத்து நகைகளும் தற்போது கோவில் நிர்வாகம் வசம் வந்துவிட்டன. இருப்பினும் சட்டவிரோதமாக கோவில் நகைகளை அடகு வைத்ததால் கந்தசாமி சேனாபதி மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கந்தசாமி சேனாபதிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்.












Click it and Unblock the Notifications