நாளை முதல் 31ஆம் தேதி வரை 144(1) தடை உத்தரவு! சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அதிரடி! என்ன காரணம் தெரியுமா?
சிவகங்கை :சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் வருகிற 31 ஆம் தேதி வரை 144 (1) தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர் .
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வருகின்ற 24.10.2022 அன்று மருதுபாண்டியர்களின் நினைவு தினம் மற்றும் காளையார்கோவிலில் வருகின்ற 27.10.2022 அன்று மருதுபாண்டியர்களின் குருபூஜை நிகழ்வு நடைபெற உள்ளது.
அதில் பங்கேற்க வருகை தரும் சமுதாய தலைவர்கள் மற்றும் சமுதாய பிரதிநிதிகள் பொதுமக்கள் அரசின் விதிமுறைகளை முறையாக கடைபிடித்திட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி. கேட்டு கொண்டுள்ளார்.

ஏற்பாடுகள் தீவிரம்
மேலும் சட்டம் மற்றும் ஒழுங்கு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. 24ந் தேதி திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபம் மற்றும் நினைவுத்தூண் ஆகிய இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துவதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அரசு விழாவான இந்த நிகழ்ச்சியில் 6 தமிழக அமைச்சர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடும் கட்டுப்பாடுகள்
இந்த நிகழ்வில் பங்கேற்று அஞ்சலி செலுத்த வருபவர்கள் பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள் , பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் சம்மந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளரிடம் முன் அனுமதியை பெற வேண்டும். வாகனத்தின் எண் RC நகல், இன்சூரன்ஸ் நகல், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆதார் நகல், வாகனத்தில் பயணம் செய்பவர்களின் பெயர் மற்றும் முழு முகவரி ஆதார் நகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள்
முன் அனுமதி பெற்று மரியாதை செலுத்த வருபவர்கள் சொந்த வாகனங்களில் மட்டும் வர வேண்டும். வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்கள், வேன், டிராக்டர், இருசக்கர வாகனங்கள், போன்ற வாகனங்களில் வர அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக்கூடாது. மரியாதை செலுத்த வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை தவிர்ப்பதுடன், ஒலிபெருக்கிகள் ஏதும் பொருத்தி செல்லவோ, சாதி, மத உணர்வுகளை தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது.

144 (1) தடை உத்தரவு
அனுமதி பெற்றவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு வந்து செல்வதுடன், வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் எந்த இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்ல வேண்டும். ஊர்வலமாக வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ப்ளக்ஸ் போர்டுகள் பேனர்கள் வைக்கவும் அனுமதி இல்லை என்றும், மாவட்ட நிர்வாகம் மாவட்ட காவல்துறை சார்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அதாவது 23ஆம் தேதி வரும் 30 ஆம் தேதி வரை 144 (1) தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications