திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சாமிநாதபுரம் விபத்து வழக்கில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல் அதே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய முதல்நிலை போலீஸ்காரர் மணிகண்டன் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக எழுந்த புகாரில் பணி நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டார்.
காவல்துறையில் பணிபுரிபவர்கள் பதவியில் ஒழுங்கீனமாக செயல்பட்டாலோ அல்லது லஞ்சம் வாங்கினாலோ பணியிடை நீக்கம், பணி நீக்கம் அல்லது கட்டாய ஓய்வு போன்ற கடுமையான சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் துறை ரீதியான தண்டனைகள் வழங்கப்படுவது வழக்கம்.. குறிப்பாக பொதுமக்கள் அல்லது வழக்கில் தொடர்புடையவர்களிடம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாகப் பிடிபட்டால் அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கில் சிக்கினால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

அதேபோல் ஒரு காவலர் மீது ஏதேனும் குற்றவியல் வழக்கு (கைது நடவடிக்கை, அடிதடி, கொலை, கடத்தல், பாலியல் குற்றங்கள்) பதிவு செய்யப்பட்டு, அவர் 48 மணி நேரத்திற்கு மேல் காவல் காவலில் (Judicial Custody) வைக்கப்பட்டால் அவர் தானாகவே சஸ்பெண்ட் செய்யப்படுவார். தனக்கு அளிக்கப்பட்ட முக்கியப் பொறுப்பில் இருந்து தவறுவதற்காக (உதாரணமாக: கைதி தப்பியோடக் காரணமாய் இருப்பது, பாதுகாப்புப் பணியில் தூங்குவது) சஸ்பெண்ட் செய்யப்படுவார்.
காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொதுவெளியில் மிக மோசமாகவோ அல்லது ஒழுங்கீனமாகவோ நடந்துகொண்டால் (உதாரணமாக: குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்வது, பாலியல் வழக்கில் கைதானால்) கண்டிப்பாக பணி நீக்கம் செய்யப்படுவார். அதேபோல் காவலர் மீது ஏற்கனவே பலமுறை எச்சரித்தும், தண்டனை பெற்றும் திருந்தாமல் தொடர்ந்து லஞ்சம், கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார். ஏதேனும் ஒரு கிரிமினல் வழக்கில் நீதிமன்றம் அவருக்குத் தண்டனை (சிறைத்தண்டனை அல்லது அபராதம்) விதித்துத் தீர்ப்பளித்தால், அவர் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்படுவார். உரிய அனுமதி இல்லாமல் அல்லது உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமல் இருந்தால், இதற்கான விளக்கம் கேட்டு அனுப்பப்படும் நோட்டீஸிற்குப் பிறகும் பணிக்கு வராவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார். இப்படியான பல்வேறு காரணங்கள் உள்ளன. திண்டுக்கல்லில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்து நடந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் உள்பட இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்பட போலீசார் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் பிரதீப் உத்தரவின்பேரில், டிஎஸ்பி தனஞ்செயன் விசாரணை நடத்தினார். விசாரணையில் விபத்து வழக்கில் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதையடுத்து சாமிநாதபுரம் காவல் நிலையத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ (வயது 51), ஏட்டு சுதாராணி (42) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவிட்டார்.
இதற்கிடையே அதே காவல் நிலையத்தில் 35 வயதாகும் மணிகண்டனம் என்பவர் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை பெற்ற நிலையில், அவரை பணி நீக்கம் செய்து திண்டுக்கல் மாவட்ட காவல் காணிப்பாளர் பிரதீப் உத்தரவிட்டார்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா அம்பிளிக்கை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் லியோனி ரஞ்சித்குமார். இவர், இதற்கு முன்பு திருச்சி மாவட்டத்தில் பணியாற்றியபோது லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கி இருந்தார். அது தொடர்பான விசாரணை நடத்தப்பட்ட நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோனி ரஞ்சித்குமாரை கட்டாய ஓய்வில் வைத்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் 3 போலீசார் உள்பட மொத்தம் 4 போலீசார் மீது நடவடிக்கை எடுத்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications