மாறும்.. என் தலைமையில் கூட்டணி அமையும்: சரத்குமார் பரபர! தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி முடிவு என்ன?
சிவகங்கை: மாற்றம் வரும்போது, எனது தலைமையில் கூட்டணி அமையும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவலாம் என கூறப்படுகிறது. திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவ வாய்ப்புள்ளது.

திமுகவை பொறுத்தவரை, அதன் கூட்டணி பலமாகவே உள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து திமுக பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிமுக, பாஜக உள்பட பிற கட்சிகளும் வலுவான கூட்டணியை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை வழக்கம்போல் சீமான் தனித்து களமாட உள்ளார். 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டார் சீமான்.
சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த 2 நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஆனால் அக்கட்சிக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. அதனால் இந்த முறையும் அதிமுகவுக்கு சரத்குமாரின் சமக ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சரத்குமார் இந்த முறை தனது ரூட்டை மாற்றியுள்ளதாக தெரிகிறது. அதாவது, பாஜக அணியில் சரத் குமார் இணைய உள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்தும் வகையில் நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். மாநில, மண்டல நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டது.
கூட்டணி தொடர்பான அறிவிப்பை விரைவில் அறிவிக்க உள்ளதாக சரத்குமார் கூறியுள்ளார். அதாவது வரும் பிப்ரவரி 24ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்ட குழுவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது பற்றியும், கூட்டணி தொடர்பாகவும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே தளக்காவூரில் வரசித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார், மனைவி ராதிகா, குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய "சரத்குமார், அனைவரும் கூட்டணி யாருடன் என்றே கேட்கிறீர்கள். தனித்து நிற்கிறீர்களா என கேட்க மாட்டேன் என்கிறீர்கள்.
என் தலைமையில் கூட்டணியில் சேருங்கள் என்று அழைப்பது அதிகமான சிந்தனையாக இருக்கும். இன்றைக்கு பணநாயகம் உள்ளது. மக்கள் மாறுகின்ற சூழல் வரும்போது எனது தலைமையில் கூட்டணி அமையலாம். பிப்ரவரி 24ல் கும்பகோணத்தில் நடைபெறும் உயர்மட்ட குழுவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது குறித்து முடிவெடுப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications