எங்க அண்ணன்.. அன்பை அள்ளித் தருவதில் மன்னன்! தங்கை திருமணத்திற்கு அண்ணன் கொடுத்த ’சூப்பர்’ சீதனம்!
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த திருமணத்தில் தங்கையின் ஆசைக்காக ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாய் ,கன்னி நாய், சண்டை சேவல்களை சீதனமாக வழங்கிய அண்ணன் குறித்த செய்திதான் இணையத்தில் கவனத்தை பெற்றிருக்கிறது.
அண்ணன் தங்கை உறவு ரொம்பவே சுவாரசியமானது. ஒரு நாள் வீட்டில் இருந்தாலும் வரும் சகோதர - தங்கை சண்டைக்கு தற்போது வரை தீர்வு கிடையாது.
ஆனால் தங்கைக்கு ஒன்றென்றால் அண்ணன்களால் தாங்கிக் கொள்ள முடியாது. திருமணம் ஆகி தனது தங்கை இன்னொரு வீட்டுக்குச் செல்லும்போது மனதிற்குள்ளே அழும் அண்ணன்கள் இங்கு ஏராளம்.

அண்ணன் - தங்கை
ஆண்கள் பொதுவாக பாசத்தை வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் தங்கையோடு பிறந்த அண்ணன்களும் அண்ணன்களோடு பிறந்த தங்கைகளும் என்றுமே கொடுத்து வைத்தவர்கள் தான். தங்கை திருமணமாகி செல்லும்போது தன்னால் முடிந்தவற்றையும் ஏன் தன்னால் முடியாதவற்றையும் கூட சீதனமாக கொடுத்து அழகு பார்க்கும் அண்ணன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திருமணம்
அப்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த திருமணத்தில் தங்கையின் ஆசைக்காக ஜல்லிக்கட்டு காளை, சண்டை கிடாய் ,கன்னி நாய், சண்டை சேவல்களை சீதனமாக வழங்கிய அண்ணன் குறித்த செய்திதான் இணையத்தில் கவனத்தை பெற்றிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் சுரேஷ் _செல்வி தம்பதியினர். இவர்களின் மகளான விரேஸ்மாவிற்கு நேற்று திருமண நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் அவர்கள் அண்ணன் தான் இப்படி வித்தியாசமாக அசத்தியுள்ளார்.

சீதனங்கள்
விரேஸ்மாவின் அண்ணன் ராயல் என்பவர் திடீரென மேடைக்கு தான் தங்கைக்காக பார்த்து வாங்கிய இல்லை வளர்த்த சீதானங்களை ஒன்றன் பின் ஒன்றாக மேடையேற்றினார். இதனை பார்த்து அசந்து போயினர். பலரும் இது போன்ற சீதனத்தை இதுவரை தாங்கள் பார்த்ததேயில்லை எனவும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனர்.

இப்படி ஒரு சீதனமா?
ராயல் கொடுத்தது கார், நகை, பணம், சீர்வரிசை பாத்திரங்களை இல்லை. தான் உயிருக்கு உயிராக வளர்த்தவற்றை. அதுவும் தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமானவற்றை. விரேஸ்மாவின் அண்ணன் ராயல் சிறுவயது முதலே தனது வீட்டில் ஜல்லிக்கட்டு காளை, சண்டை சேவல், சண்டை கிடாய், கன்னி நாய்கள், ஆகியவற்றை வளர்த்து வந்திருக்கிறார். அவற்றில் பலவற்றை விரேஸ்மாவும் ஆசை ஆசையாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.

மணமக்களுக்கு வாழ்த்து
இந்த நிலையில் தான் தனது தங்கையின் திருமணத்திற்கு அவர் வளர்த்தவற்றையே சீதனமாக வழங்க முடிவெடுத்த சகோதரர் ராயல் தனது தங்கையின் திருமண வரவேற்பு என்று ஜல்லிக்கட்டு காளை சண்டை கன்னி நாய்கள் சண்டை சேவல் ஆகியவற்றை மேடை ஏற்றி புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு அவற்றை தனது தங்கைக்கு சீதனமாகவும் வழங்கியிருக்கிறார். தற்போது இந்த புகைப்படங்கள் தான் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருக்கிறது. இதுவரை எத்தனையோ சீர்வரிசைகளை பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த மாதிரியான சீர்வரிசையை நாங்கள் பார்க்கவே இல்லை என பலரும் கமெண்ட் செய்து வருவதோடு மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றார்கள்.












Click it and Unblock the Notifications