“உசிரே நீதானே..” மாணவி சொன்ன வார்த்தையால் அப்படியே உருகிப்போன முதல்வர் ஸ்டாலின்! நெகிழ்ச்சி வீடியோ!
சிவகங்கை: கல்லூரி மாணவிகள் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'உசிரே நீதானே...💗' என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சிவகங்கை மாவட்டத்திற்கு கள ஆய்வு மேற்கொண்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். மேலும், கவிஞர் முடியரசனுக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய மு.க.ஸ்டாலின், ரூ.1.6 கோடியில் மருது சகோதரர்களுக்கு சிலை அமைக்கவும் அடிக்கல் நாட்டினார்.

முன்னதாக, நேற்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பொதுமக்களைச் சந்தித்தார். அதற்காக வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுடன் பொதுமக்கள், கல்லூரி மாணவிகள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் மாணவ, மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், இன்று சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். அவர் அங்கு வந்தபோது, கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசிய கல்லூரி மாணவி ஒருவர், "அப்பா ரொம்ப நன்றிப்பா.. உங்களோட ஆட்சியில் நாங்க ரொம்ப முன்னேறி இருக்கோம்" என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார். மாணவி, தன்னை அப்பா எனக் கூறியதைக் கேட்டு அகமகிழ்ந்து கரம் பற்றிக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.
மற்றொரு மாணவி, "நீங்கள் எங்களுக்காக புதுமைப்பெண் திட்டம் கொண்டு வந்திருக்கிறீர்கள். கல்லூரி கட்டணம் செலுத்துவதற்கு எங்களுக்கு அது மிகவும் உதவியாக இருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மூலமாக, பல திறமைகளை நாங்கள் வளர்த்து கொள்கிறோம்." என்றார்.
உசிரே நீதானே…💗 pic.twitter.com/ifq2JGjEyp
— M.K.Stalin (@mkstalin) January 22, 2025
இன்னொரு மாணவி, “சமீபத்தில் நீங்கள் தாக்கல் செய்த பெண்கள் பாதுகாப்பு மசோதாவை கண்டபின் மிகவும் பெருமையாக இருந்தது. ரொம்பவும் பாதுகாப்பாக உணர்கிறோம். இனிமேல் வெளியில் பாதுகாப்பாக நாங்கள் செல்லலாம் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மாணவிகள், தன்னிடம் நேருக்கு நேராக, தனது ஆட்சியைப் பாராட்டியதால் மகிழ்ந்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில், மாணவிகள் நெகிழ்ச்சியுடன் பேசிய வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 'உசிரே நீதானே...💗' என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோவைப் பகிர்ந்து நெகிழ்ந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அண்மையில் சட்டப்பேரவையில், திமுக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அதனால் பயன் அடைந்தவர்கள் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு மாணவ மாணவிகள், அப்பா.. அப்பா என வாய் நிறைய அழைக்கும் போது மகிழ்ச்சி அடைவதாக கூறி கண் கலங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications