"15 லட்சம் எப்படியோ அப்படிதான்".. திமுக தேர்தல் வாக்குறுதிக்கு கார்த்தி சிதம்பரம் பதில்
சிவகங்கை: தமிழகத்தில் ஆக்கபூர்வமான பொருளாதாரம் வர வேண்டும் என்றால் மின்சார வாரியத்தின் கடனை குறைக்க வேண்டும் என்று கூறிய காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம், திமுக தேர்தல் வாக்குறுதி குறித்த கேள்விக்கு, பாஜக 15 லட்சம் வாக்குறுதியை ஒப்பிட்டு பதில் அளித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சிவங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. கடன் சுமை கூடிக் கொண்டே இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்." என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், "இந்தியாவில் உள்ள அனைத்து அரசாங்கமும் அப்படித்தான் செல்லும்.

நாம் நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறோம். அதற்கு ஏற்ற வருமானம் மத்திய, மாநில அரசுகளுக்கு கிடையாது. தமிழகத்தில் இதை இன்னும் சீரியஸாக பேசலாம். ஆனால் அதைப்பற்றி கவனிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும் என்றால் மின்சார வாரியத்தில் கடன் சுமையை குறைக்க வேண்டும்.
மின்சார வாரியத்துக்கு லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு மேல் கடன் இருக்கிறது. மின்சார வாரியத்துக்கு வரும் வருமானம் என்பது, அந்தக் கடனுக்கான வட்டியை கட்ட மட்டுமே உதவும். மற்றபடி கடனை குறைக்க முடியாது. தமிழகத்தில் ஆக்கபூர்வமான பொருளாதாரம் வர வேண்டும் என்றால் மின்சார வாரியத்தின் கடனை குறைக்க வேண்டும்.
அதை குறைக்காமல் தமிழகத்தில் பொருளாதார மாற்றம் வராது. அதேநேரத்தில் நிறைய முதலீடுகளும் வருவதால், தமிழகம் மற்ற மாநிலங்களை விட வளர்ச்சியடைந்த மாநிலமாக தான் பார்க்கப்படும். டாஸ்மாக் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை விசாரித்து வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். அதன் பிறகு அது அரசியல் காரணமான குற்றச்சாட்டா, உண்மையாக தவறு நடந்துள்ளதா என தெரியும்.
எல்லோருக்கும் வாட்ஸப் இருக்கிறது. அதை பிரின்ட் எடுத்து வைத்துக் கொள்கிறோமா. அப்படியிருக்கும்போது வாட்ஸப்பை பிரின்ட் எடுத்து வைத்திருப்பதாக சொல்வது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தல் 2 முனைப் போட்டியா, 3 முனைப் போட்டியா, 4 முனைப் போட்டியா என்பதை பொறுத்துதான் தேர்தல் பிரச்சாரங்கள், வியூகங்கள் எடுபடும் என்று சொல்ல முடியும்." என்றார்.
"கல்வி கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக 4 வருடங்களாக நிறைவேற்றவில்லை." என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கார்த்திக் சிதம்பரம், "கல்வி கடனை மத்திய அரசு வங்கிகள் தான் கொடுக்கின்றன. அதை எந்த மாநில அரசும் ரத்து செய்ய முடியாது. மத்திய அரசு நினைத்தால் கல்வி கடனை எளிதாக ரத்து செய்யலாம். அதற்கு அவர்களுக்கு மனமில்லை.
பெரிய தொழிலதிபர்களுக்கு எல்லாம் சலுகை, கடன் தள்ளுபடி வழங்கும்போது கல்வி கடன் செய்யலாம். கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் சிரமப்பட்ட மாணவர்களுக்கு எல்லாம் கல்வி கடன் ரத்து செய்திருக்கலாம். அதை ரத்து செய்யாதது மத்திய அரசின் தவறு. மாநில அரசுக்கு கீழ் உள்ள கூட்டறவு வங்கிக் கடனாக இருந்தால் இவர்கள் ரத்து செய்யலாம்.
மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளில் விவசாயக் கடன், வங்கி கடன், தொழில் கடன் ஆகியற்றில் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசு தான் செய்ய முடியும். 2009 தேர்தலுக்கு முன்பு விவசாயக் கடனை மத்திய அரசு ரத்து செய்தது." என்றார். செய்தியாளர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பவே, "15 லட்சம் எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு இந்த வாக்குறுதிகளும் உண்மை." என்று பதில் கூறினார்.












Click it and Unblock the Notifications