அஜித் குமார் வீட்டில் திலகபாமா சொன்ன வார்த்தை.. உடனே குறுக்கே வந்த திமுக MLA தமிழரசி.. பரபரப்பு!
சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமாரின் வீட்டில் பாமக பொருளாளர் திலகபாமா, திமுக எம்.எல்.ஏ தமிழரசி ஆகியோருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பாமகவைச் சேர்ந்த திலகபாமா, போலீசாரால் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தாயாரிடம் உங்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறியபோது, அங்கிருந்த திமுக எம்.எல்.ஏ தமிழரசி, திலகபாமாவிடம் ஆறுதல் மட்டும் சொல்லுங்கள் வேறு எதுவும் பேசக் கூடாது எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார் (27), அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். அவரை ஜூன் 27 ஆம் தேதி திருட்டு வழக்கு ஒன்று தொடர்பாக மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்றனர். போலீசார் தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார்.
அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயங்கள் இருப்பதும், ரத்தக் கசிவு இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு பிஎன்எஸ் 103 (1) பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றப்பட்டது. தொடர்ந்து தனிப்படை காவலர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித் குமாரின் வீட்டுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செய்து, மௌன அஞ்சலி செலுத்தினார்.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை அஜித்குமாரின் வீட்டிற்கு சென்றார். அப்பொழுது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த அஜித் குமாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து விஜய் அஞ்சலி செலுத்தினார். தவெக தலைவர் விஜயுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உடனிருந்தார்.
முன்னதாக, பாமக பொருளாளர் திலகபாமா, சிவகங்கை மடப்புரத்தில் உள்ள அஜித் குமார் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். திலகபாமா, போலீசாரால் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தாயாரிடம் உங்களுக்கு நிகழ்ந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறினார்.
அப்போது அங்கிருந்த திமுக எம்.எல்.ஏ தமிழரசி, திலகபாமாவிடம் ஆறுதல் மட்டும் சொல்லுங்கள் வேறு எதுவும் பேசக் கூடாது எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. "அவங்ககிட்ட பேசுனா நீங்க ஏன் பேசுறீங்க.. ஆறுதல் மட்டும் எப்படி இவர்களின் இழப்பை ஈடு செய்யும்? இந்த 4 வருசத்துல 24 கஸ்டடி கொலை நடந்துள்ளது. இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். " என திலகபாமா வாக்குவாதம் செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திலகபாமா, "பணமும், பட்டாவும் கொடுத்தால் வேலை முடிந்துவிட்டதா? முதலமைச்சரின் கீழ் உள்ள துறையில் தவறு நடந்துள்ளது. அதற்கு இழப்பீடு கொடுத்துள்ளீர்கள்.. அதற்கு கொடுக்கிறோம் கொடுக்கிறோம் என சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். பணம் கொடுத்து வாயை மூடப் பார்க்கிறார்கள். இவர்களிடம் நீதி கிடைக்காது.
அஜித் குமார் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம், எஃப்.ஐ.ஆரில் அஜித் குமாருக்கு வலிப்பு என போட்டிருக்கிறார்களே.. இது சரியா என்றுதான் கேக்க ஆரம்பித்தேன். உடனே பக்கத்தில் இருந்த திமுக எம்.எல்.ஏ தமிழரசி நீங்கள் அதையெல்லாம் பேசக்கூடாது என்கிறார். உயர் நீதிமன்றம் குட்டிய பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது." என ஆவேசமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications