அன்று ”முப்பாட்டன் முருகன்”, இன்று ”கிருஷ்ண பரமாத்மா” பேரன் - சீமான் அறிவித்த ஆன்மீக அரசியல்
சிவகங்கை: அநீதி, அநியாயம், அக்கிரம் நடக்கும்போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் வாரிசாக நான் அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து இருக்கிறார்.
Recommended Video
காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவின் ஊழல் பற்றி பேசுகிறார்.
அவர் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக ஊழல் குறித்தும் பேச வேண்டும். ஊழல் செய்ததற்காகவே சிறை சென்ற தலைவியுடைய கட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவின் ஊழல் பற்றி பேசிய அண்ணாமலைக்கு என்ன தகுதி இருக்கிறது. பாஜகவினர் சாமியை பற்றி பேசுகிறார்கள். நாங்கள் வாழும் பூமியை பற்றி பேசுகிறோம்.
நிச்சயமாக மக்கள் என்னை தேடி வருவார்கள். நான் பொறுமையாக இருந்து அநீதி, அக்கிரமம் நடக்கும் இடமெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் வாரிசாக வந்து நிற்பேன். கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் நான். தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலை கொள்கையாக கொண்ட நாம் தமிழர் கட்சியே உண்மையான எதிர்க்கட்சி.
2024 தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும். அண்ணாமலையில் அதுபோல் நிற்க முடியாது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடுவது அரசுடைய விளையாட்டு. அதுபற்றி கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை." என்றார்.