"மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்?" ரூ. 2000 வாபஸ் நடவடிக்கை எதற்கு! ப.சிதம்பரம் சொன்ன பதில் இதுதான்
சிவகங்கை: ரூ.2000 நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இது குறித்து ப. சிதம்பரம் முக்கியமாக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் நடைபெற்றது. இதை முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அங்குள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு ப. சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அந்த ரத்த தான முகாமில் பலரும் ஆர்வமாக வந்து ரத்த தானம் செய்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், "500 ரூபாய் நோட்டுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்குகிறார்கள் எனச் சொல்லி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தார்கள். 500 ரூபாய் நோட்டுகளையே பதுக்க முடியும் என்றால் 2000 ரூபாய் நோட்டுகளில் அதை எளிதாகப் பதுக்க முடியும் தானே.. இது மத்திய அரசுக்குத் தெரியாதா என்ன? இருப்பினும், 2000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தனர்.

மீண்டும் 1000 ரூபாய் நோட்டுகள்: இந்த 2000 ரூபாய் நோட்டுகள் என்பது சாதாரண எளிய மக்களிடம் பயன்பாட்டில் இல்லை. இந்த நோட்டுகள் மிகப் பெரிய வர்த்தகர்களிடம் தான் இருக்கிறது. அவர்கள் செப். மாதம் வரை 2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனச் சிவப்பு கம்பளம் விரிப்பது போன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்த துக்ளக் தர்பார்.. இதில் மத்திய அரசு மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்தாலும் கூட நான் வியப்படைய மாட்டேன்.
அவர்கள் தவறு செய்துவிட்டார்கள். அந்த தவறை மறைக்கவே இப்போது 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளனர். மக்கள் ஏற்றுக் கொள்ளாத ரூபாய் நோட்டுகளை வெளியிடுவது தவறான செயல்.. இந்த தவறை ஒப்புக் கொள்ளாமல் 2000 ரூபாய் நோட்டுகளை அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இந்த நோட்டை அறிமுகம் செய்த போதே, இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றோம்.

ப. சிதம்பரம்: ஆனால், இதை அவர்கள் அப்போது ஒப்புக் கொள்ளவில்லை. இப்போதாவது மத்திய அரசுக்குப் புத்தி வந்தது என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று எங்களுக்கு மகிழ்ச்சிதான்.. முழுமையாகச் சிந்திக்காமல், யோசிக்காமல் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்தார்கள். இப்போது செய்த தவறை ஒப்புக் கொள்ளாமல் சத்தமில்லாமல் அந்த நோட்டுகளை வாபஸ் பெற்றுள்ளனர். அவர்கள் செய்த தவறை 7 அண்டுகள் கழித்துத் திருத்திக் கொண்டது மகிழ்ச்சி தான்" என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. 2016இல் பணமதிப்பு நீக்கம் சமயத்தில் ரொக்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில், அப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.
இப்போது அதற்கான தேவை நிறைவடைந்து விட்டதாகவும், பெரும்பாலும் பொதுமக்களிடையே இந்த நோட்டுகள் புழக்கத்தில் இல்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வரும் செப். 31ஆம் தேதி வரை தங்கள் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications