அங்கே இடிமுழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது! திமுக கூட்டத்தில் பக்திப்பாடல்! சாமி ஆடிய பெண்கள்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பெண்கள் சாமி ஆடிய நிகழ்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கருணாநிதி நூற்றாண்டு விழாவை திமுகவில் உள்ள ஒவ்வொரு சார்பு அணிகளும் மாவட்ட வாரியாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் சிவகங்கை மாவட்ட திமுக மகளிரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் காரைக்குடியில் நேற்றிரவு நடைபெற்றது.

இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்துக்கு காரைக்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருந்த மகளிரணி நிர்வாகிகள் அமைச்சர் மேடையேறி பேசும் வரை, கூட்டம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக ஆர்கெஸ்ட்ரா கச்சேரி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
சினிமா பாடல், திமுக பாடல் என பாடிய ஆர்கெஸ்ட்ரா குழு திடீரென பக்திப்பாடல் ஒன்றை பாடியது. ''அங்கே இடிமுழங்குது கருப்பசாமி தங்க கலசம் மின்னுது'' என பாடல் பாடத் தொடங்கியதும் மேடைக்கு கீழே அமர்ந்திருந்த பெண்கள் பலரும் பக்திப் பரவசத்தில் சாமி ஆடத் தொடங்கினர். அமைச்சர் வரும் நேரத்தில் இதென்னடா வம்பாக போச்சு என திமுக நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
இதையடுத்து பாடலை நிறுத்துங்கப்பா என திமுக நிர்வாகி ஒருவர் சவுண்டு விட்டதை தொடர்ந்து ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பாடுவதை நிறுத்தினர். சாமி ஆடிய பெண்களை அவர்கள் அருகில் அமர்ந்திருந்தவர்கள் ஆசுவாசப்படுத்தி தண்ணீர் கொடுத்து அமர வைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். கடைசியில் இந்த தகவல் அமைச்சர் பெரியகருப்பன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
இதனிடையே இந்த நிகழ்வை பொறுத்தவரை பகுத்தறிவு கட்சியாக பார்கப்படும் திமுக பொதுக்கூட்டத்தில் பக்திப்பாடல் பாடப்பட்டது தான் இதில் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications