அதிமுக விவகாரம்.. முதலாளியை சந்திக்க சென்றுள்ளார் ஓபிஎஸ்.. கார்த்தி சிதம்பரம் பரபரப்பு..!
சிவகங்கை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், முதலாளியை சந்தித்து ஆலோசனை செய்வதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்த ஜூன் 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம், அக்கட்சியின் வரலாற்றில் மிகமுக்கிய நாளாக அமைந்தது. பெரும் கூச்சல், குழப்பம், ஒற்றைத் தலைமை வலியுறுத்தல், வெளிநடப்பு என சினிமாவில் காட்டப்படும் அத்தனை திருப்பங்களுடன் நடைபெற்றது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகும், அதிமுக விவகாரம் பரபரப்பின் உச்சத்திலேயே உள்ளது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றது கூடுதலாக பேசுபொருளாகியுள்ளது.
ஏற்கனவே துணை முதலமைச்சராக தான் பொறுப்பேற்றுக் கொண்டது பிரதமர் நரேந்திர மோடி வற்புறுத்தியதால் தான் என்று ஓ.பன்னீர் செல்வம் வாக்குமூலம் அளித்திருந்தார். இதன்மூலம் அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதுமட்டுமல்லாமல், அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்ததற்கும் ஓ.பன்னீர் செல்வமே காரணம் என்று விமர்சனங்கள் வந்தன. தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும்போது, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனுத்தாக்கலில் பங்கேற்பதாக கூறிவிட்டு, ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ.ரவீந்திரநாத் டெல்லியில் முகாமிட்டனர்.
இந்தநிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மத்திய அரசு பாதிக்கப்படுபவர்களை கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை அறிவித்து வருகிறது. அக்னிபாத் ஒரு விபரீதமான திட்டம். இந்த திட்டத்தால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வேளாண் சட்டம் திரும்பப்பெறப்பட்டது போல், அக்னிபாத் திட்டமும் பாஜகவால் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்தார்.
Recommended Video
தொடர்ந்து அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசிய கார்த்தி சிதம்பரம், தாங்கள் கட்சி முன்மொழிந்த தீர்மானத்தையே பொதுக்குழுவில் நிராகரித்த முதல் அரசியல் கட்சி அதிமுக தான். அதிமுக முன்னர் எம்ஜிஆர், ஜெயலலிதா என்று ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட்டது. அண்மைக் காலமாகவே இரட்டைத் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் ஒற்றைத் தலைமை என்ற திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதில் ஓ.பன்னீர் செல்வம் முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக டெல்லி சென்றுள்ளதாக விமர்சித்தார்.