கண்ணீர் வடித்து கதறி அழுகிறோம்.. இந்த நிலைமையா..? அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
சிவகங்கை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம் என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அரசியல் மாற்றங்களை சந்தித்து வந்தாலும், பாஜக உடனான கூட்டணியை முறித்தது முக்கியமான திருப்புமுனையாக பார்க்கப்பட்டது. தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ உடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தது அதிமுக.

அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ ஆகிய 2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்திலேயே களம் கண்டன. தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. அதேசமயம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.
அதிமுக படுதோல்வி: லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை மதுரை, தென் சென்னை, வேலூர், நெல்லை, நீலகிரி, கோவை ஆகிய 6 தொகுதிகளில் பாஜக மூன்றாம் இடத்துக்கு தள்ளியது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார் ஓ.பன்னீர்செல்வம். அங்கு ஓபிஎஸ்ஸுக்கு அடுத்த இடத்தில் அதிமுக 3வது இடம் பிடித்துள்ளது. தேனியில் போட்டியிட்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் 2வது இடம் பிடித்தார். அங்கும் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அதே போல் தருமபுரியில் பாமக 2ஆம் இடத்தை பிடித்ததால் அதிமுக 3ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுகவை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் நான்காம் இடத்திற்கு தள்ளியது நாம் தமிழர் கட்சி. மேலும், தென்சென்னை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி, வேலூர், ராமநாதபுரம் ஆகிய 7 மக்களவைத் தொகுதிகளில் ஆறில் ஒரு பங்கு வாக்குகளை கூட பெறாததால் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
அதிமுக தொண்டர்கள் போஸ்டர்: கடந்த 2019 தேர்தலில் 1 தொகுதியில் அதிமுக வென்ற நிலையில், தற்போது ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அதிமுக ஒன்றிணைவை வலியுறுத்தி குரல்கள் வலுவடைந்துள்ளன. சிவகங்கையில் அதிமுகவினர், ஒன்றிணைவை வலியுறுத்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
"எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கம் நடைபெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது என்பதை எண்ணி கழகத்தின் உண்மை தொண்டர்கள் கண்ணீர் வடித்து கதறி அழுகின்றோம். சிதறிக் கிடக்கும் கழகத் தொண்டர்களை ஒன்றுபடுத்துவோம், அதிமுகவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல உறுதியேற்போம்" என அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அழைப்பு விடுத்த ஓபிஎஸ்: முன்னதாக, அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட சசிகலா, கேசி பழனிசாமி, புகழேந்தி ஆகியோர், அதிமுக ஒன்றிணைய வேண்டும் எனக் குரல் கொடுத்தனர். முன்னாள் தமிழக முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சியை மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் தயாராகுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், "எம்.ஜி.ஆர். அவர்களால் துவக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களால் கட்டிக்காக்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒற்றுமையால் மீட்டெடுக்க அறைகூவல். ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம், கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியம்.
"தாய்வழி வந்த தங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நாமதே" என்னும் எம்ஜிஆர் மொழியை மருந்தாகக் கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம். ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திவிட்டுப் போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்" எனக் கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
கேபி முனுசாமி பதிலடி: இதற்கு பதிலடி கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, "இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர் ஓபிஎஸ். அவருக்கு அதிமுக பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் இல்லை. பாஜக தலைவர் அண்ணாமலை, ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார். அவருடன் கைகோர்த்த ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக தொண்டர்களை அழைக்க அருகதை இல்லை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications