"திமுக உடன் கூட்டணி வைக்க தயார், ஆனால்.." திடீரென டோனை மாற்றிய சீமான்! அடுத்து என்ன சொன்னார்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தமிழக அரசின் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருப்பதாக விமர்சித்துப் பேசினார். அதேநேரம் கூட்டணி குறித்த கேள்விக்கு விரிவான பதிலை அளித்த சீமான், ஒரு நிபந்தனையை விதித்து அதை ஏற்றால் திமுக உடன் கூட்டணி வைக்கத் தயார் என கூறினார்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்து கொண்டார். அதில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களுக்குச் சீமான் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், பல்வேறு விஷயங்களுக்கும் விரிவான பதிலை அளித்தார்.

சீமான்
செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "நமது மக்களுக்கு நல்லாட்சி வர வேண்டும்.. நல்ல அரசியல் மக்களுக்கு நடக்க வேண்டும்.. ஆனால், அதை விட்டுவிட்டு கூட்டணி எனப் பேசுவதில் என்ன பயன்.. கூட்டணி வைக்காமல் தேர்தலில் எப்படி வெல்ல முடியும் என கேட்பதே தவறு.. எந்தவொரு கொள்கையும் இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என்று கேட்பதே சரி.. இங்குக் கூட்டணி வைத்து சட்டசபை, நாடாளுமன்றத்திற்குப் போனவர்களைப் பார்த்து இருப்பீர்கள்.. அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கிறோம் தானே!
திமுக உடன் கூட்டணி வைக்கத் தயார்
இங்கு நீங்கள் சுதந்திரமாகக் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் நான் பொறுமையாக உட்கார்ந்து பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறேன். இதுபோல தமிழகத்தில் வேறு எதாவது தலைவர் பதில் சொல்வாரா.. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிக்கல், ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து திமுகவினரிடம் கேள்வி எழுப்ப முடியுமா.. இந்த கேள்விகளுக்கு எல்லாம் திமுக பதில் சொல்லிவிட்டால் அவர்களுடன் கூட்டணி வைக்க நான் தயாராக இருக்கிறேன்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நானும், செங்கோட்டையனும் பங்கேற்றோம். சீமானால் நினைத்ததை எல்லாம் பேச முடிகிறது.. ஆனால் நான் சிக்கலில் இருக்கிறேன் என்று செங்கோட்டையனே கூறினார். அவரை போன்ற பெரிய தலைவரே இக்கட்டான சூழலில் இருக்கிறார் என்றால்.. நாடும் மக்களும் எப்படி இருப்பார்கள்..
எதுவும் செய்வதில்லை
எந்தவொரு கூட்டணியிலும் இல்லாமல் தனித்துப் போட்டியிடும் எங்களுக்கு 36 லட்சம் மக்கள் ஓட்டுப் போட்டு இருக்கிறார்கள். இதே எண்ணிக்கை அடுத்தாண்டு இரட்டிப்பானால் என்ன செய்வீர்கள். இங்கே அதிகாரத்திற்கு வர வாக்குறுதி அளிப்போர், அதிகாரத்திற்கு வந்த பிறகு எதையும் செய்வதில்லை.. என்னிடம் அதிகாரம் இல்லை.. ஆனாலும், நான் சொல்வது நடக்கிறது.
முடிந்தால் வீட்டை இடித்துப் பார், விவசாய நிலத்தை எடுத்துப் பார், பரந்தூரில் புதிய விமான நிலையத்தைக் கட்டிப்பார் என்கிறேன்.. அவர்களால் இது எதையும் செய்ய முடிவதில்லை.. எனக்கு இருக்கும் துணிவு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு இருப்பதில்லை. எனவே, என்னிடம் வந்து தனியாகப் போட்டியிட்டால் வெல்ல முடியாது எனக் கேட்காதீர்கள்.. கெஜ்ரிவாலால் வெல்ல முடியும்போது என்னால் வெல்ல முடியாதா? தமிழ்நாட்டிலேயே கூட 2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தனித்து நின்று வெற்றி பெற்றாரே" என்றார்.
கைக்கு வந்த கால்குலேசன்.. சீமானுக்கு போனை போட்ட விஜய்.. நீங்க பெரிய ஆள் ஆச்சே.. தட்டி கழித்த சீமான்
சட்ட ஒழுங்கு மிக மோசம்
தொடர்ந்து தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு குறித்துப் பேசிய அவர், "மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் எனக் குரல் கொடுத்த ஜெகபர் அலி கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜாகிர் உசேன் கொலை நடந்திருக்காது. இந்த ஆட்சியில் நாம் இன்னும் கொல்லப்படவில்லை.. உயிருடன் தான் இருக்கிறோம் என்று நினைத்து பொதுமக்கள் சந்தோசப்பட்டுக் கொள்ளும் நிலை தான் இருக்கிறது.
இது குறித்துக் கேட்டால் கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை குறைந்ததாக முதல்வர் கூறுகிறார். ஒரு கொலை என்றாலும் அது கொலைதான்.. ஒரு உயிர் என்றாலும் அது உயிர்தான்.. சட்ட ஒழுங்கு மோசமாக இருப்பதால் பாதுகாப்பற்ற மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. ஆம்ஸ்ட்ராங் போன்ற பிரபலமானோருக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்றால் இங்குச் சாமானியனின் நிலை என்ன" என்று கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications