கீழடி அருங்காட்சியகம் பார்க்க போறீங்களா? செப்.11 லீவு.. சிவகங்கை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
சிவகங்கை: திருப்புவனத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகமும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் பெற்றுள்ள கீழடி அருங்காட்சியகம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை கீழடி அகழாய்வுத் தளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தற்போது வரை 9 கட்டங்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகிறது.

அகழாய்வுகள் மூலம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்கள் உலகத் தமிழர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் 31 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 18 கோடியே 43 லட்சம் மதிப்பில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த மார்ச் 5ஆம் தேதி திறக்கப்பட்டது. பண்டைய தமிழர்களின் புகழினை, பறை சாற்றுகின்ற வகையிலும், உலக நாடுகள் வியக்கின்ற வகையிலும் கீழடியில் கட்டப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை காண தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர்.
கீழடி என்ற கிராமம் தற்போது மிகச்சிறந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. வாரத்தில் அனைத்து நாட்களிலும் இயங்கி வந்த கீழடி அருங்காட்சியகத்திற்கு, சுற்றுலா, பண்பாடு அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் மற்ற அருங்காட்சியகங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், கீழடி அருங்காட்சியகத்திலும் பின்பற்றப்படுகிறது.
சுதந்திரப்போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தென் மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை நிலைநாட்டவும் போராடினார். இவரது 66 வது நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி திங்கட்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு சிவகங்கையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அரசு கருவூலகங்கள், முக்கிய அலுவலகங்கள் குறைவாக பணியாளர்களுடன் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி இம்மானுவேல் சேகரன் 66 வது நினைவு தின நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி அமைதியாக நடக்கவும், சட்டம்- ஒழுங்கை பராமரிக்கவும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை மற்றும் இளையான்குடி ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. மேலும் இதற்கு பதிலாக வரும் 23 ஆம் தேதி பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்புவனத்தில் உள்ள கீழடி அருங்காட்சியகமும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications