அஜித் குமார் குடும்பத்தினரிடம் “என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்” என கூறிய விஜய்.. நவீன் பேட்டி!
சிவகங்கை: போலீசாரின் காவல் விசாரணையில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் வீட்டிற்கு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தினரிடம் நிதி உதவியாக ரூபாய் 2 லட்சம் ரொக்கப் பணம் அளித்துள்ளதாக அஜித் குமாரின் தம்பி நவீன் குமார் தெரிவித்துள்ளார்.
காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித் குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று இன்று ஆறுதல் தெரிவித்தார். மேலும், அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் ரூ. 2 லட்சம் நிவாரணமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

விஜய் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அஜித் குமாரின் தம்பி நவீன் குமார், "விஜய் ரூபாய் 2 லட்சம் ரொக்கமாக அளித்து ஆறுதல் கூறியுள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித் குமார் காவல் துறையினரின் விசாரணையில் உயிரிழந்தார்.
இது தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
காவல் துறை விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் இல்லத்திற்குச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் அஜித்குமார் இல்லத்திற்குச் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
காவல் துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications