உச்சத்தில் தங்கம் விலை.. ஆனா மோடி ஆட்சியில் இருக்கும் வரை குறையாதாம்.. கார்த்தி சிதம்பரம் பரபர
சிவகங்கை: சிவகங்கை தொகுதியில் பிரச்சாரம் செய்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பொதுமக்களைக் கவரும் வகையில் எளிமையாகப் பிரச்சாரம் செய்து வரும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் பிரச்சாரம் தீவிரமடைந்து உள்ளது.

இந்த முறை திமுக, அதிமுக, பாஜக என்று பல முனை போட்டி நிலவி வருகிறது. இறுதிக்கட்ட பிரச்சாரத்தை அனைவரும் மேற்கொண்டு வருவதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
சிவகங்கை: இதில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீண்டும் போட்டியிடுகிறார். சிவகங்கை முழுக்க தீவிர பிரச்சாரம் செய்து வரும் அவர், மக்களுக்குப் புரியும்படி மிக எளிமையாகப் பிரச்சாரம் செய்து வருகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பாஜக அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாகச் சொன்ன அவர், "நாம் ஆங்கிலத்தில் எதாவது கேள்வி கேட்டாலும் அவர்கள் இந்தியில் தான் பதில் சொல்கிறார்கள். எல்லா சுற்றறிக்கையும் கூட இந்தியில் தான் வருகிறது. சட்டத்திற்குப் பெயர் வைப்பதைக் கூட இந்தியில் தான் வைக்கிறார்கள். ஒன்னும் புரிவதில்லை. இந்தியைத் தவிர அவர்கள் எதற்குமே முன்னுரிமை அளிப்பதில்லை" என்று விமர்சித்துப் பேசினார்.
கிடா வெட்டுவது: மேலும், அவர் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கிடா வெட்டுவதைத் தடை செய்வார்கள் என்பதைத் தொடர்ந்து பேசி வருகிறார். இது குறித்து அவர் பேசுகையில், "உங்கள் அனைவருக்கும் நினைவில் இருக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா ஆட்சியில் கிடா வெட்டவும், சேவலை நேர்த்திக்கடன் கொடுக்கவும் தடை விதித்தார்கள். அதிமுகவும் பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.. அதிமுக கடந்த காலங்களில் எதைச் செய்தார்களோ.. அதைத் தான் பாஜக இன்று செய்யும். பாஜக செய்வதற்கு அதிமுக வக்காலத்து வாங்கும்.
நடந்த முடிந்த 17ஆவது நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் ஒரு மசோதாவுக்கு கூட பாஜக அரசுக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வாக்களிக்கவில்லை. இப்போது கூட்டணி இல்லை என்று சொன்னாலும் நாடாளுமன்றத்தில் எல்லா விஷயங்களுக்கும் அவர்கள் கொண்டு வந்த எல்லா மோசமான சட்டங்களுக்கும் அதிமுக துணையாகவே செயல்பட்டார்கள். எதிர்த்ததே இல்லை.
தடை செய்வார்கள்: நான் அடித்துச் சொல்கிறேன். பாஜக மீண்டும் வென்று ஆட்சியைப் பிடித்தால் கிடா வெட்டுவதையும் சேவலை நேர்த்திக்கடன் கொடுப்பதையும் தடை செய்வார்கள். அதை தடுக்க வேண்டும் என்றால் நமது கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் மத்தியில் ஆட்சி மாற்றம் வர வேண்டும்" என்றார்.
தங்கம் விலை: மேலும், விலைவாசி உயர்வு குறித்து அவர் பேசுகையில், "பாஜக இருக்கும் வரை தங்கம் விலை குறையாது.. தங்கம் விலையை விடுங்க.. சீப், சோப்பு கண்ணாடி விலை கூட குறையாது. மாலை டிவியில் சீரியல் பார்க்கறீங்கள் தானே.. அந்த கேபிள் டிவி விலை கூட அதிகரித்துவிட்டது. எங்கள் ஆட்சியில் 50 ரூபாயில் இருந்தது. இப்போது ரூ.250இல் இருக்கிறது. மோடி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டால் மட்டுமே விலைவாசி குறையும். அதற்கு திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்" என்று சாடி பேசினார்.












Click it and Unblock the Notifications