திருமா கட்சியை வன்னியரசு அபகரித்தால் ஏற்பாரா? ராமதாஸ் இப்படி செய்யலாமா? - பொங்கிய மருது! என்னாச்சு?
சிவகங்கை : விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னியரசோ, பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்களோ அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? எடப்பாடி பழனிசாமியின் அபகரிப்பு அரசியலை விசிக, பாமக, பாஜக உள்ளிட்ட எந்தக் கட்சிகளும் ஆதரிக்கக்கூடாது என ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 28ஆம் தேதி சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. ஓபிஎஸ் தரப்பின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தனி நீதிபதி உத்தரவிற்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பினர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதற்கிடையே அதிமுக பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ், "அ.தி.மு.கவின் சட்ட விதிகளின்படி தொண்டர்களால் தேர்வு செய்யப்படுபவரே கட்சியின் பொதுச்செயலாளராக ஆக முடியும். இதற்கு முன்பு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தாங்கள் மறைகின்றவரை கட்சியின் பொதுச் செயலாளர்களாக இருந்தனர். அதற்கு காரணம் அவர்கள் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டதுதான்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கு கொடுத்த அந்த உரிமையை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துக் கொண்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அபகரிப்பு அரசியலை கூட்டணிக் கட்சியான பாஜக ஆதரிக்கக் கூடாது என வேண்டுகோள் விடுக்கிறோம். பாஜக மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் ஆகியோருக்கும் இதே வேண்டுகோளை விடுக்கிறோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியை வன்னி அரசோ, பாமகவை பணம் படைத்த இரண்டாம் கட்ட தலைவர்களோ அபகரித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? அதனால் அபகரிப்பு எந்த நிலையில் வந்தாலும் அதனை நிராகரிக்க வேண்டும். கண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகிறோம். அப்படி எடப்பாடியை ஆதரிக்கக்கூடிய கட்சிகள் மக்கள் மன்றத்தில் நிராகரிக்கப்படும். நாங்களும் சும்மா விடமாட்டோம்" என ஆவேசமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications