கர்நாடகாவில் பதுங்கி.. கைதாகி.. ம்ஹூம்! ராஜேந்திர பாலாஜிக்கு கிடைக்காத அனுதாபம்.. அக்கா மகன் தோல்வி
சிவகாசி: சிவகாசி மாநகராட்சியின் 9வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அக்காள் மகன் வசந்தகுமார் தோல்வியடைந்தார்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ல் ஒரே கட்டமாக நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது.
இதன்மூலம் மாநகராட்சியில் 1,369 வார்டுகள், நகராட்சியில் 3,824 வார்டுகள், பேரூராட்சியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிப்.,19 தேர்தலில் 61 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
8 மணி நேரம், 100 கேள்விகள்.. துருவி துருவி கேட்ட அதிகாரிகள்.. ராஜேந்திர பாலாஜி பதில் என்ன தெரியுமா?
சிவகாசி மாநகராட்சி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சி, சமீபத்தில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர் உள்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ராஜேந்திர பாலாஜி மருமகன்
சிவகாசி மாநகராட்சி 9வது வார்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அக்காள் மகன் வசந்தகுமார் அதிமுக சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர், திமுக, பாஜக வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் போட்டியிட்டனர். இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கிய நிலையில் வசந்தகுமார் பின்தங்கி தோல்வி அடைந்தார்.
தலைமறைவு
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ 3 கோடி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் அவரது முன் ஜாமீன் மனுவை கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என கருதப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவாகிவிட்டார்.
கைது நடவடிக்கை
இவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் அவர் அவசர அவசரமாக வெவ்வேறு காரில் தப்பி சென்றார் என கூறிய விருதுநகர் காவல் துறை அவர் தலைமறைவாக இருந்ததாக அறிவித்தது.
அனுதாப ஓட்டு இல்லை
இந்த நிலையில், கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ராஜேந்திர பாலாஜி 20 நாட்களுக்கு பிறகு சாலையில் வைத்து மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டார். தன்னை நடுரோட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்ததால் உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு எதிராக பின்னணியிலிருந்து தீவிரமாக களமாடினார் ராஜேந்திரபாலாஜி. சிவகாசி தனது சொந்த ஊர் என்பதால், தன்னை கைது செய்த விஷயம் மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தி வாக்குகளைப் பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவரது சகோதரி மகன் தோல்வி அடைந்ததன் மூலம் அனுதாப வாக்குகள் செல்லுபடியாகவில்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.