தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன்: பட்டாசாக வெடித்த கமல்
சிவகாசி: தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலையொட்டி நடிகர் கமல்ஹாசன் கடந்த 13 ஆம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்போது நேற்று மதுரையில் பேசிய அவர் தான் தமிழக சட்டசபை தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.
ஆனால் எந்தத் தொகுதி என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இந்த நிலையில் அவர் மதுரையிலிருந்து புறப்பட்டு விருதுநகருக்கு இன்று காலை 9 மணிக்கு வந்தார்.

திருத்தங்கல் சாலை
அப்போது அவர் சிவகாசி- திருத்தங்கல் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பட்டாசுத் தொழிலாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது கமல்ஹாசன் கூறுகையில் எம்ஜிஆர் எங்கள் சொத்து: அவர் மடியில் அமர்ந்தவன் நான்.
மதத்தால் பிரிவினை செய்பவர்களுக்கு தமிழகம் தக்க பாடம் புகட்டுவார்கள்.

முதல் இடம்
நாங்கள் யார் என கேட்டவர்கள் இன்று எங்களின் வெற்றி குறித்து கணக்கெடுக்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் சிவகாசி சாலையில் அங்கப்பிரதட்சணம் செய்வேன். கூவத்தூரில் ஆரம்பித்த கூத்து இன்று ஊரே கூவமாகிவிட்டது என்பதுதான் உண்மை. கேட்டால் தமிழகம் முதன்மை மாநிலம் என்கிறார்கள். ஊழலில்தான் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது.

சுத்தப்படுத்தும் பணி
உலகின் சிறந்த மாநிலமாக தமிழகம் மாற வேண்டுமே தவிர ஈயத்தை பார்த்து பித்தளை இளித்து கொண்டிருக்கக் கூடாது. அதில் பெருமை ஒன்று இல்லை. நான் சிறியவனாக இருந்த போதிலிருந்து கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என மாறி மாறி பல தலைவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பட்டாசு வெடிக்க வேண்டாம், மாசு ஏற்படுவதாக கூறி ஒரு நாள் கொண்டாட்டத்தை நிறுத்திவிடுமாறு சொன்னார்கள்.

கோவா
ஆனால் உங்கள் தலைநகர் குடியிருக்க தகுதியில்லாத இடம். நீங்கள் இருக்கும் இடத்தையே சுத்தமாக வைத்திருக்க முடியாமல் அங்கிருந்து ஒரு தலைவர் கோவாவுக்கு சென்றார். அதை மறந்துவிடாதீர்கள். தலைநகரையே சுத்தமாக வைத்திருக்க தெரியாதவர்களுக்கு வைகை வரை வாய் நீள்கிறதே எப்படி. ஓட்டுக்கு 5 ஆயிரம் கொடுத்தால் வாங்காமல் ரூ.1 லட்சம் கேளுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications