”ஈ சாலா கப் நம்தே” கோப்பையை தட்டி தூக்கிய பெங்களுர் அணி.. ஆர்சிபி ரசிகர்கள் உற்சாகம்
அகமதாபாத்: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டு காலமாக கோப்பைக்காக ஏங்கிய பெங்களூர் அணியின் கனவு நிறைவேறியுள்ளது.
18-வது ஐபிஎல் தொடரின் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி யின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மொதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் பேட்டிங் துவங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. நட்சத்திர வீரர் கோலி (43 ரன்கள்), மயங்க் அகர்வால் (24), ரஜத் படிதார் (26), என சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி எண்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைத்தது.
எனினும், அதை அப்படியே முன்னோக்கி கொண்டு செல்வதில் தடுமாறியது. இங்கிலிஷ் அவுட் ஆன பிறகு நிலைமை அப்படியே மாறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஐயர் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதன் முதலாக ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்துள்ளது.
"ஈ சாலா கப் நம்தே" என்ற பெங்களூர் ரசிகர்களின் கோஷம் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நிறைவேறியுள்ளது. பெங்களூர் அணி வெற்றியால் அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூர் அணியை வாழ்த்தி பலரும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.20 கோடி பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும். 3-வது இடத்துக்கு ரூ.7 கோடியும், 4-வது இடத்துக்கு ரூ.6.5 கோடி பரிசு தொகையும் கிடைக்கும். கடந்த 2022 முதல் இதே பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications