ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் தெரியுமா.. இந்திய வீரர்களுக்கே ஷாக் கொடுத்த இலங்கை வீரர்!
மும்பை: இந்திய அணி வீரர்களின் பேட்டில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டது போல் உள்ளதாக பேசிய இலங்கை அணியின் பனுகா ராஜபட்ச, 90ஸ் கிட்ஸின் ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் பேட் வதந்திக்கு உயிர் கொடுத்துள்ளார். இதன் காரணமாக பனுகா ராஜபட்சவை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்ய தொடங்கினர்.
2003 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி கொடூரமான தோல்வியை அடைந்தது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் 121 பந்துகளில் 8 சிக்ஸ், 4 பவுண்டரி உட்பட 140 ரன்களை விளாசி தள்ளினார். 90ஸ் கிட்ஸ் மனதில் இந்த இன்னிங்ஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வியை விடவும், 2003 தோல்வி இன்னும் பலருக்கும் ஆறாத வடுவாக உள்ளது. அந்தப் போட்டிக்கு பின் இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு புரளி கிளம்பியது. அதாவது ஆஸ்திரேலியா கேப்டன் ரிக்கி பாண்டிங் ஸ்பிரிங் பேட் பயன்படுத்தி தான் சதத்தை விளாசினார்.. இதனால் உலகக்கோப்பை பைனல் மீண்டும் நடத்தப்பட உள்ளதாக பேசினர்.
ஆனால் சோசியல் மீடியா கொஞ்சம் வளரத் தொடங்கிய பின், இது புரளி என்பது உறுதியானது. இதனிடையே ரிக்கி பாண்டிங்கும் அவ்வப்போது தனது உலகக்கோப்பை பைனல் பேட்டின் புகைப்படத்தை பகிர்ந்து ஜாலியாக கிண்டல் செய்வார். இந்த நிலையில் ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் புரளிக்கு இணையாக இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அணியின் அதிரடி பேட்ஸ்மேனான பனுகா ராஜபட்ச பேசுகையில், இந்திய வீரர்கள் பயன்படுத்தும் பேட்களில் ரப்பர் அடுக்கு இணைக்கப்பட்டதை போல் உள்ளது. மற்ற நாட்டு வீரர்கள் பயன்படுத்துவதைவிட இது சிறப்பானது. இது எப்படி சாத்தியம் என்பது என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனால் ரிக்கி பாண்டிங்கின் ஸ்பிரிங் பேட் கதையை அப்படியே இந்திய வீரர்களுக்கு இலங்கை வீரர் பனுகா ராஜபட்ச பொறுத்திவிட்டதாக இந்திய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். பனுகா ராஜபட்சவின் கருத்து இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல், இலங்கை ரசிகர்கள் மத்தியிலும் புலம்ப வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications