சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?
சென்னை: சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இணைய அஸ்வின் தீவிரமாக முயற்சித்து வருவதாக ரசிகர்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்கள் மீது அஸ்வின் பல்வேறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. இதன் மூலமாக சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவர் மீது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக 8 வீரர்கள் அடைந்த காயம் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் மருத்துவக் குழுவுக்கு வீரர்களை பற்றிய புரிதல் இல்லை என்றும் அஸ்வின் விமர்சித்துள்ளார். இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சனை நியமிக்க விவாதங்கள் நடந்து வருகின்றன. அதேபோல் அஸ்வினும் சில நாட்களுக்கு முன்பாக ஏதோ ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்படுவார் என்று உறுதியாக கூறி இருந்தார். இதனால் சிஎஸ்கே கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமிக்கும் பிஆர் பணிகள் நடந்து வருவதாக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்படும் பட்சத்தில், அவரால் சிஎஸ்கே நிர்வாகத்திடம் பயிற்சியாளர்கள் குழுவில் மாற்றங்கள் செய்ய சில கோரிக்கைகளை வைக்க முடியும். அஸ்வின் மற்றும் சஞ்சு சாம்சன் இடையில் நீண்ட கால நட்பு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அஸ்வினை ஒரு ஆலோசகராக சஞ்சு சாம்சன் கருதுகிறார்.
இதனை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். சஞ்சு சாம்சன் விருப்பத்தின் பெயரிலேயே அஸ்வின் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார். ஒருவேளை சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டால், அஸ்வின் சிஎஸ்கே அணியுடன் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக செயல்பட அஸ்வின் தீவிரமாக இருப்பதையும் கடந்த சில நாட்களில் அவரின் நடவடிக்கைகள் மூலமாக புரிந்து கொள்ள முடிவதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications